பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து

பெரியாழ்வார்

இரண்டாம் திருமொழி – அஞ்சனவண்ணனை

 

 

(யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்)

கலிநிலைத்துறை

 

234:

அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை

மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே

கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின்

என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2) 1.

 

235:

பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில்

சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே

கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின்

எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 2.

 

236:

நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும்

பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே

கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின்

என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே. 3.

 

237:

வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட

பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே

கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின்

எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே. 4.

 

238:

அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்

கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே

எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின்

தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 5.

 

239:

மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய்

படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே

கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின்

இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 6.

 

240:

வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட

துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே

கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின்

புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 7.

 

241:

பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்

என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்

பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின்

என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே. 8.

 

242:

குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான்

உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை

கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின்

கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 9.

 

243:

என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை

கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய

பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல்

இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. (2) 10.

 

 

Leave a Reply