இரண்டாம் திருமொழி – அஞ்சனவண்ணனை
(யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்)
கலிநிலைத்துறை
234:
அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின்
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2) 1.
235:
பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில்
சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே
கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 2.
236:
நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும்
பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே
கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின்
என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே. 3.
237:
வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட
பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின்
எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே. 4.
238:
அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்
கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே
எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 5.
239:
மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய்
படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின்
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 6.
240:
வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட
துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே
கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின்
புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 7.
241:
பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே. 8.
242:
குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான்
உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை
கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின்
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 9.
243:
என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய
பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. (2) 10.