682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் ஜூலை 7 திங்கள் இன்று காலை 6 30 மணி அளவில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில், சிருங்கேரி சங்கராசார்யர், சைவ ஆதினங்கள் கலந்து கொள்ள, தமிழகம் மட்டுமல்லாது பிற இடங்களில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் பங்கேற்று தரிசித்தார்கள்.
ஜூன் 26 அன்று, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. ஜூலை 1 மாலை யாகசாலை பூஜைகள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் தொடங்கி நடைபெற்றன. இதற்காக யாகசாலை ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இந்த யாகசாலையில் 71 ஹோம குண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றன.
திருச்செந்தூர் சீரலைவாய் ஆலயத்தில் சயனித்த கோலத்தில் அருளும் செந்தில் கோவிந்தர் சந்நிதிக்காக, திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மகா தீபாராதனையுடன் நிறைவுற்று யாகசாலையில் இருந்து தீர்த்த கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களில் அபிஷேகத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து இன்று காலை 6 30 மணி அளவில் சண்முகர், ஜயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கப் பெருமான், நடராஜர், உள்வெளி பரிவார மூர்த்தி ஸ்வாமிகளின் சந்நிதிகள் உள்பட அனைத்து சந்நிதிகள், ராஜகோபுரம் ஆகியவற்றில் உள்ள கலசங்களில் பூஜிக்கப்பட்ட நன்னீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக வைபவத்தில் சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள், சைவ ஆதினங்கள் ஆகியோர் கலந்து கொள்ள, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பாபிஷேக விழாவினைக் காண கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டிய கடற்கரையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் எங்கும் முழங்க கும்பாபிஷேக வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, இந்தக் கும்பாபிஷேக வைபவத்தைக் காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் நேற்று மதியம் 12 மணிக்குப் பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வைக் காண நகர் முழுதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் 6,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.