பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து

பெரியாழ்வார்

 

ஒன்பதாம் திருமொழி – என்னாதன்

(க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை

இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்)

 

கலித்தாழிசை

 

3 07:

என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்

தன் நாதன்காணவே தண்பூமரத்தினை

வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட

என்னாதன்வன்மையைப்பாடிப்பற

எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. (2) 1.

 

308:

என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்

தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி

முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான்

தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற

தாசரதிதன்மையைப்படிப்பற. 2.

 

309:

உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு

விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து

செருக்குற்றான் வீரம்சிதைய தலையைச்

சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற

தேவகிசிங்கத்தைப்பாடிப்பற. 3.

 

310:

மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட

ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான். என்றுஅழ

கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன

சீற்றமிலாதானைப்பாடிப்பற

சீதைமணாளனைப்பாடிப்பற. 4.

 

311:

பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து

நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு

அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த

அஞ்சனவண்ணனைப்பாடிப்பற

அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. 5.

 

312:

முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன்

அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த

படியில்குணத்துப் பரதநம்பிக்கு அன்று

அடிநிலையீந்தானைப்பாடிப்பற

அயோத்தியர்கோமானைப்பாடிப்பற. 6.

 

313:

காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்

நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து

மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்

தோள்வலிவீரமேபாடிப்பற

தூமணிவண்ணனைப்பாடிப்பற. 7.

 

314:

தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்

நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடைச்

சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள்

ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற

அயோத்திக்கரசனைப்பாடிப்பற. 8.

 

315:

மாயச்சகடமுதைத்து மருதிறுத்து

ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி

வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற

ஆயர்களேற்றினைப்பாடிப்பற

ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற. 9.

 

316:

காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு

ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்

நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த

ஆராவமுதனைப்பாடிப்பற

அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற. 10.

 

தரவு கொச்சகக்கலிப்பா

 

317:

நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று

உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்

செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல்

ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. (2) 11.

 

 

Leave a Reply