எட்டாம் திருமொழி – நல்லதோர் தாமரை
(தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய்
பலபடி வருந்திக்கூறும் பாசுரம்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
297:
நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன்
மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? (2) 1.
298:
ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள்
கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு
நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை
என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ? 2.
299:
குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி
தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி
அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு
துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ? 3.
300:
ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால்
திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான்
பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை
மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ? 4.
301:
தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை
செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும்
கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு
இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ? 5.
302:
வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை
கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ?
நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து
சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ? 6.
303:
அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை
பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ?
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து
பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ? 7.
304:
குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ.
நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன்
இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி
கடைகயிறேபற்றிவாங்கிக் கைதழும்பேறிடுங்கொலோ? 8.
305:
வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து
கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ?
ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை
பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ? 9.
306:
மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு
ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம்
தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன
தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே. (2) 10.