எட்டாம் திருமொழி – மாதவத்தோன்
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1)
தரவு கொச்சகக்கலிப்பா
402:
மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை
ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர்
தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும்
போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. (2) 1.
403 :
பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்
இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர்
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்
சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2.
404:
மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார்
உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர்
திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை
பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. 3.
405:
கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய
கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர்
தேந்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே. 4.
406:
பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனை
உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்
குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ்
திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. 5.
407:
கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே
ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர்
தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து
யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. 6.
408:
கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய
பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர்
தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. 7.
409:
வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்
எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர்
எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி
மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. 8.
410:
குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்
நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர்
குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி
மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. 9.
411:
பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை
செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல்
திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு
இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. (2) 10.