பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து

பெரியாழ்வார்

எட்டாம் திருமொழி – மாதவத்தோன்

(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1)

தரவு கொச்சகக்கலிப்பா

402:

மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை

ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர்

தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும்

போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. (2) 1.

 

403 :

பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்

இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர்

மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்

சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2.

 

404:

மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார்

உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர்

திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை

பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. 3.

 

405:

கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு

ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய

கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர்

தேந்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே. 4.

 

406:

பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனை

உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்

குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ்

திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. 5.

 

407:

கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே

ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர்

தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து

யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. 6.

 

408:

கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய

பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர்

தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு

தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. 7.

 

409:

வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்

எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர்

எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி

மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. 8.

 

410:

குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்

நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர்

குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி

மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. 9.

 

411:

பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை

செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல்

திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு

இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. (2) 10.

Leave a Reply