இரண்டாம் திருமொழி – அலம்பாவெருட்டா
(திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு)
கலிநிலைத்துறை
3 38:
அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை
குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை
சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர்
சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. (2) 1.
339:
வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை
பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை
எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி
செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. 2.
340:
தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை
தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை
அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. 3.
341:
ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்
கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை
வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி
தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 4.
342:
ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை
கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன்
திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. 5.
343:
ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும்
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 6.
344:
மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்
முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை
கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன்
தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 7.
345:
குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச்
சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி
சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 8.
346:
சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள்
அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை
இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான்
சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. 9.
347:
எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார்
விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை
பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த்
தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 10.
348:
மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை
கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை
விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்
கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. (2) 11.