திருவிருத்தம்

நம்மாழ்வார்

2558: வெறிவிலக்குவிக்க நினைந்த தோழி இரங்கல்

உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய்,இவளைப்
பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய்குழல்வாய்த்
துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவ ளாகம்,மெல் லாவி எரிகொள்ளவே. 81

2559: உருவெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண்ணழகுக்கு இரங்கல்

எரிகொள்செந் நாயி றிரண்டுட னேயுத யம்மலைவாய்,
விரிகின்ற வண்ணத்த எம்பெரு மான்கண்கள், மீண்டவற்றுள்
எரிகொள்செந் தீவீழ் அசுரரைப் போலஎம் போலியர்க்கும்
விரிவசொல் லீரிது வோ,வைய முற்றும் விளரியதே? 82

2560: அன்றிலின் குரலுக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல்

விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை,
முளரிக் குரம்பை யிதுவிது வாக, முகில்வண்ணன்பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல் லாவியும் நைவுமெல்லாம்
தளரில் கொலோவறி யேன்,உய்ய லாவதித் தையலுக்கே. 83

2561: தலைவி தலைவனைக் காண விரைதல்

தையல்நல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும்,
ஐயநல் லார்கள் குழிய விழவினும், அங்கங்கெல்லாம்
கையபொன் னாழிவெண் சங்கொடும் காண்பான் அவாவுவன்நான்
மையவண் ணா.மணியே,முத்த மே.என்றன் மாணிக்கமே. 84

2562: மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்குதல்

மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி,
ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த
மாணிக்க மே.என் மரகத மே.மற்றொப் பாரையில்லா
ஆணிப்பொன் னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே. 85

2563: தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல்

அடைக்கலத் தோங்கு கமலத் தலரயன் சென்னியென்னும்,
முடைக்கலத் தூண்முன் அரனுக்கு நீக்கியை, ஆழிசங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கன் றாய்ச்சிவன் தாம்புகளால்
புடைக்கலந் தானை,எம் மானையென் சொல்லிப் புலம்புவனே? 86

2564: அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல்

புலம்பும் கனகுரல் போழ்வாய அன்றிலும், பூங்கழிபாய்ந்
தலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும், ஆங்கவைநின்
வலம்புள் ளதுநலம் பாடு மிதுகுற்ற மாகவையம்
சிலம்பும் படிசெய்வ தே,திரு மால்இத் திருவினையே? 87

2565: போலிகண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல்

திருமால் உருவொக்கும் மேரு,அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும், அன்னகண்டும்
திருமால் உருவோ டவஞ்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,எங் கேவரும் தீவினையே? 88

2566: தலைவன் கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல்

தீவினைக்கரு நஞ்சை நல்வினைக்கு இன்னமு தத்தினை
பூவினை மேவிய தேவிமணாளனை, புன்மையெள்காது
ஆவினை மேய்க்கும்வல் லாயனை அன்றுல கீரடியால்
தாவின ஏற்றையெம் மானைஎஞ் ஞான்று தலைப்பெய்வனே? 89

2567: தலைவனைப் பிரிந்த தலைவி காலநீட்டிப்புக்கு ஆற்றாது உரைத்தல்

தலைப்பெய்து யானுன் திருவடி சூடுந் தகைமையினால்,
நீலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம் மாயமும், மாயம்செவ்வே
நிலைப்பெய் திலாத நிலைமையுங் காண்டோ றசுரர்குழாம்
தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை யூழி சுருங்கலதே. 90

Leave a Reply