திருவிருத்தம்

நம்மாழ்வார்

2508: தூது செல்லாத மேகங்களைக் குறித்து தலைவி இரங்குதல்

இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்
அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம்,அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே . 3 1

2509: தலைவி போலி கண்டு உரைத்தல்

மேகங்க ளோ.உரை யீர்,திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்துநுந்தம்
ஆகங்கள் நோவ, வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? 32

2510: தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்துரைத்தல்

அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர், ஈங்கோர்பெண்பால்
பொருளோ எனுமிகழ் வோ?இவற் றின்புறத் தாளென்றெண்ணோ?
தெருளோம் அரவணை யீர்,இவள் மாமை சிதைக்கின்றதே. 33

2511: கூடலிழைத்துவருந்தும் தலைவி நிலையைப் பாங்கி தலைவற்கு உரைத்தல்

சிதைக்கின்ற தாழியென் றாழியைச் சீறி,தன் சீறடியால்
உதைக்கின்ற நாயகந் தன்னொடும் மாலே, உனதுதண்தார்
ததைக்கின்ற தண்ணந் துழாயணி வானது வேமனமாய்ப்
பதைக்கின்ற மாதின் திறத்துஅறி யேஞ்செயற் பாலதுவே. 34

2512: தலைவி மாலைக்கு ஆற்றாமையின் மேல் வாடைக்கு இரங்கல்

பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக் கொண்டு, பகலிழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை, உலகளந்த
மால்பால் துழாய்க்கு மனமுடை யார்க்குநல் கிற்றையெல்லாம்
சோல்வான் புகுந்து,இது வோர்பனி வாடை துழாகின்றதே. 35

2513: தோழி தலைவன் கொடுமை கூறல்

துழாநெடுஞ் சூழிரு ளென்று,தன் தண்தா ரதுபெயரா
எழாநெடு வூழி யெழுந்தவிக் காலத்தும், ஈங்கிவளோ
வழாநெடுந் துன்பத்த ளென்றிரங் காரம்ம னோ.இலங்கைக்
குழாநெடு மாடம், இடித்த பிரானார் கொடுமைகளே . 36

2514: நற்றாய் தன்மகள் சென்ற சுரத்தருமை கூறி இரங்கல்

கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர், கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து, அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடை,இள மாஞ்சென்ற சூழ்கடமே. 37

2515: தலைவனைப் பிரிந்த தலைவி போலிகண்டு மயங்குதல்

கடமா யினகள் கழித்து,தம் கால்வன்மை யால்பலநாள்
தடமா யினபுக்கு நீர்நிலை நின்ற தவமிதுகொல்,
குடமாடி யிம்மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்து
நடமா டியபெரு மான்,உரு வொத்தன நீலங்களே. 38

2516: தலைவனது உரு வெளிப்பாடுகண்ட தலைவி தோழிக்குக் கூறல்

நீலத் தடவரை மேல்புண்ட ரீக நெடுந்தடங்கள்
போல, பொலிந்தெமக் கெல்லா விடத்தவும், பொங்குமுந்நீர்
ஞாலப் பிரான்விசும் புக்கும் பிரான்மற்றும் நல்லோர்பிரான்
கோலம் கரிய பிரான்,எம் பிரான்கண்ணின் கோலங்களே. 39

2517: இருள் கண்டு இரங்கிய தலைவி தோழிக்கு வரைவு விருப்புரைத்தல்

கோலப் பகற்களி றொன்றுகற் புய்ய, குழாம்விரிந்த
நீலக்கங் குற்களி றெல்லாம் நிறைந்தன, நேரிழையீர் .
ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே
ஏலப் புனைந்தென்னை மார்,எம்மை நோக்குவ தென்றுகொலோ. 40

Leave a Reply