திருவிருத்தம்

நம்மாழ்வார்

2568: தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தொடு நிற்றல்

சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே. 91

2569: வேந்தற்குற்றுழிப் பிரிவில் தலைவனைக் குறித்துத் தலைவி இரங்குதல்

பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதிவாய்,
நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நீன்னைவிண்ணோர்
தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே. 92
2570: இருள்கண்டு அஞ்சுகிற தலைவி தோழி செவிலியரை வெறுத்தல்

காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர்
மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும்
காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து
மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே. 93

2571: தலைவியைக் கண்ட பாங்கன் தலைவனை அடுத்து வியந்து கூறல்

மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,
மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார்,
எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே? 94

2572: தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல்

யாதானு மோராக் கையில்புக்கு,அங் காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்ன மே,அதனால்
யாதானும் பற்றிநீங் கும்விர தத்தைநல் வீடுசெய்யும்
மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே. 95

2573: தலைவி வெறிவிலக்குவைக்க நினைத்தல்

வணங்கும் துறைகள் பலபலஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96

2574: தலைவன் பிரிவில் துயில் கொள்ளாத தலைவி இரங்குதல்

எழுவதும் மீண்டே படுவதும் பட்டு,எனை யூழிகள்போய்க்
கழிவதும் கண்டுகண் டெள்கலல் லால்,இமை யோர்கள்குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக்கண் ணாரக்கண்டு
கழிவதோர் காதலுற் றார்க்கும்,உண் டோ கண்கள் துஞ்சுதலே? 97

2576: தலைவனது அருமை நினைந்து கவல்கிற தலைவிக்குத் தோழி கூறல்

துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற,
எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும்
தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வே
நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே. 98

2576: தலைவி தனக்குத் தலைவனிடத்துள்ள அன்புறுதியைத் தோழிக்குக் கூறல்

ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே (2) 99

2577: நூற்பயன்

நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த
சொல்லார் தொடையலிந் நுறும்வல் லார்அழுந் தார்பிறப்பாம்
பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே (2) 100

திருவிருத்தம் முற்றும்

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

 

 

Leave a Reply