திருவிருத்தம்

நம்மாழ்வார்

2518: வாடைக்கு வருந்திய தலைமகள் வார்த்தை

என்றும்புன் வாடை யிதுகண் டறிதும்,இவ் வாறுவெம்மை
ஒன்றுமுருவும் சுவடும் தெரியிலம், ஓங்கசுரர்
பொன்றும் வகைபுள்ளை யூர்வான் அருளரு ளாதவிந்நாள்
மன்றில் நிறைபழி தூற்றி,நின் றென்னைவன் காற்றடுமே. 41

2519: தலைவி தலைவனது கண்ணழகில் ஈடுபட்டு வியந்துரைத்தல்

வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த,
மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன, மண்ணும்விண்ணும்
என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்தவென் பால்,எம்பி ரான தடங்கண்களே. 42

2520: தலைவனது உருவு எழில் உரைத்த தலைமகள் வார்த்தை

கண்ணும்செந் தாமரை கையு மவைஅடி யோஅவையே,
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று, மதிவிகற்பால்
விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக் குமற்றெப் பால்எவர்க்கும்
எண்ணு மிடத்தது வோ,எம்பி ரான தெழில்நிறமே? 43

2521: தலைவி தலைவனது பெருமை உரைத்தல்

நியமுயர் கோலமும் பேரும் உருவும் இவையிவையென்று,
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும், அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றியொன்றும்
பெறமுயன் றாரில்லை யால்,எம்பி ரான்றன் பெருமையையே. 44

2522: தலைவி தலைவனது நீரிடையுதவியை நினைந்துரைத்தல்

பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
ஒருங்கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவர்நம்போல்
வரும்கேழ் பவருள ரே?தொல்லை வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறு மே,சொல்லு வாழி மடநெஞ்சமே. 45

2523: நெஞ்சைத் தூதுவிட்ட தலைவி இரங்குதல்

மடநெஞ்ச மென்றும் தமதென்றும், ஓர்கரு மம்கருதி,
விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும்,அப் பொன்பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்போய்த்
திடநெஞ்ச மாய்,எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே. 46

2524: பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்கல்

திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து
சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே
சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை
விரிகின் றதுமுழு மெய்யும்,என் னாங்கொலென் மெல்லியற்கே? 47

2525: நன்னிமித்தம் கண்டு தான் ஆறியிருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறல்

மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில் மிளிர்தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகையென் காணும்,என் னாலும்தன்னைச்
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன்?
பல்லியின் சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே. 48

2526: இருளுக்கு ஆற்றாத தலைவி தோழிக்குக் கூறல்

பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்,இப் பாயிருள்போல்
கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண
வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய,மண் ணேரன்ன ஒண்ணுதலே. 49

2527: தலைவன் மீண்டு வருகையில் பாகனொடு கூறல்

ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ. கடாகின்று, தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று, அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே. 50

Leave a Reply