திருவிருத்தம்

நம்மாழ்வார்

2488: பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல்

அரியன யாமின்று காண்கின் றன,கண்ணன் விண்ணனையாய்.
பெரியன காதம் பொருட்கோ பிரிவெனெ, ஞாலமெய்தற்
குரியென வெண்முத்தும் பைம்பொன்னு மேந்தியொ ரோகுடங்கைப்
பெரியென கெண்டைக் குலம்,இவை யோவந்து பேர்கின்றவே? 11

2489: தலைவி நெஞ்சொடு கலாய்த்துத் தன் ஆற்றாமை கூறல்

பேர்கின் றதுமணி மாமை, பிறங்கியள் ளல்பயலை
ஊர்கின் றதுகங்குல் ஊழிக ளே,இதெல் லாமினவே
ஈர்கின்ற சக்கரத் தெம்பெரு மான்கண்ணன் தண்ணந்துழாய்
சார்கின்ற நன்னெஞ்சி னார்,தந்து போன் தனிவளமே. 12

2490: பிரிவாற்றாத தலைவி இருளுக்கும் வாடைக்கும் இரங்குதல்

தனிவளர் செங்கோல் நடாவு, தழல்வாய் அரசவியப்
பனிவளர் செங்கோ லிருள்வீற் றிருந்தது, பார்முழுதும்
துனிவளர் காதல் துழாயைத் துழாவுதண் வாடைதடிந்
தினிவளை காப்பவ ரார்,எனை யூழிக ளீர்வனவே. 13

2491: நலம் பாராட்டு

ஈர்வன வேலுமஞ் சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ
பேர்வன வோவல்ல தெய்வநல் வேள்கணை, பேரொளியே
சோர்வன நீலச் சுடர்விடும் மேனியம் மான்விசும்பூர்
தேர்வன, தெய்வமன் னீரகண் ணோவிச் செழுங்கயலே? 14

2492: தோழி தலைவனது கருத்தறிந்து உரைத்தல்

கயலோ நுமகண்கள்? என்று களிறு வினவிநிற்றீர்,
அயலோர் அறியிலு மீதென்ன வார்த்தை, கடல்கவர்ந்த
புயலோ டுலாம்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தெம்மொடும்
பயலோ விலீர்,கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே. 15

2493: தலைவனைப் பிரிந்த தலைவி பாங்கியை நோக்கி இருள் வியந்துரைத்தல்

பலபல வூழிக ளாயிடும், அன்றியோர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயி டும்,கண்ணன் விண்ணனையாய்.
பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும்
பலபல சூழ லுடைத்து,அம்ம வாழியிப் பாயிருளே. 16

2494: தலைவி கடலை நோக்கித் தேர்வழி தூரலென்றல்

இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழி தூரல், அரவணைமேல்
இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வதுபோல்
இருள்விரி சோதிப், பெருமா னுறையு மெறிகடலே. 17

2495: கார்கண்டு நலிந்த தலைவியின் ஆற்றாமை கண்டு பாங்கி இரங்குதல்

கடல்கொண் டெழுந்தது வானம்அவ் வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண் டெழுந்த வதனா லிது,கண்ணன் மண்ணும்விண்ணும்
கடல்கொண் டெழுந்தவக் காலங்கொ லோ.புயற் காலங்கொலோ.
கடல்கொண்ட கண்ணீர், அருவிசெய் யாநிற்கும் காரிகையே. 18

2496: செவிலி பழிக்கு இரங்குதல், பாங்கி இரங்குதலுமாம்

காரிகை யார்நிறை காப்பவர் யாரென்று, கார்கொண்டின்னே
மாரிகை யேறி அறையிடும் காலத்தும், வாழியரோ
சாரிகைப் புள்ளர்அந் தண்ணந் துழாயிறை கூயருளார்
சேரிகை யேரும், பழியா விளைந்தென் சின்மொழிக்கே. 19

2497: வெறிவிலக்கு

சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம்,இந் நோயினதென்
றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ மன்றிது வேல.நில்நீ
என்மொழி கேண்மினென் அம்மனை மீர்.உல கேழுமுண்டான்
சொல்மொழி, மாலயந் தண்ணந்து ழாய்கொண்டு சூட்டுமினே. 20

Leave a Reply