ஏழாம் திருமொழி – ஆனிரை
(கண்ணனைப் பூச்சூட அழைத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
182:
ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2) 1.
183 :
கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்.
திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய்.
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய். 2.
184:
மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய். நீள்திருவேங்கடத்துஎந்தாய்.
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய். 3.
185:
தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ. உகந்திவைசூட்டநீவாராய். 4.
186:
புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய்.
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்.
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய். 5.
187:
எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி.
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்.
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே. புன்னைப்பூச்சூட்டவாராய். 6.
188:
குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே.
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா.
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்.
குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய். 7.
189:
சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்.
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்.
ஆமாறறியும்பிரானே. அணியரங்கத்தேகிடந்தாய்.
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய். இருவாட்சிப்பூச்சூட்டவாராய். 8.
190:
அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்.
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள்மணவாளா.
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்.
கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய். 9.
191:
செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2) 10.