பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து

பெரியாழ்வார்

எட்டாம் திருமொழி – இந்திரனோடு

(கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

192:

இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்

மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்

சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய்.

அந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். (2) 1.

 

193 :

கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்

நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்.

மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்.

நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய். 2.

 

194:

செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு

அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்.

முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்.

இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான். காப்பிடவாராய். 3.

 

195:

கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று

எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார்

கண்ணனே. வெள்ளறைநின்றாய். கண்டாரோடேதீமைசெய்வாய்.

வண்ணமேவேலையதொப்பாய். வள்ளலே. காப்பிடவாராய். 4.

 

196:

பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்

எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான். நீஇங்கேவாராய்

நல்லார்கள்வெள்ளறைநின்றாய். ஞானச்சுடரே. உன்மேனி

சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய். 5.

 

197:

கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை

வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு

மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்.

அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே. காப்பிடவாராய். 6.

 

198:

கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த

பிள்ளையரசே. நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை

உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்.

பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய். 7.

 

199:

இன்பமதனைஉயர்த்தாய். இமையவர்க்குஎன்றும்அரியாய்.

கும்பக்களிறட்டகோவே. கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே.

செம்பொன்மதிள்வெள்ளறையாய். செல்வத்தினால்வளர்பிள்ளாய்.

கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய். 8.

 

200:

இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்

தருக்கேல்நம்பி. சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்

திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய்.

உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய். 9.

 

201:

போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை

மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்

வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை

பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே. (2) 10.

 

 

Leave a Reply