இரண்டாம் திருமொழி – அரவணையாய்
(கண்ணனை முலையுண்ண அழைத்தல்)
கலிவிருத்தம்
128:
அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ
வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய
திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. (2) 1.
129:
வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்
இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை
எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே
முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே. 2.
13 0:
தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்
வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா.
உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
நந்தகோபனணிசிறுவா. நான்சுரந்தமுலையுணாயே. 3.
131:
கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. 4.
132:
தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து
மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா.
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே. அமர்ந்துவந்துஎன்முலையுணாயே. 5.
133:
மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா. முலையுணாயே. 6.
134:
பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலே
கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி
வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி
கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா. நீமுலையுணாயே. 7.
135:
இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே. 8.
136:
அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
செங்கமலமுகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம்முற்றத்தூடே
அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம. விம்ம
அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே. முலையுணாயே. 9.
137:
ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே
பாடிப்பாடிவருகின்றாயைப் பற்பநாபனென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி
ஓடியோடிப்போய்விடாதே உத்தமா. நீமுலையுணாயே. 10.
138:
வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம்
நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர்
பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார்
சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே. (2) 11.