பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து

பெரியாழ்வார்

பத்தாம் திருமொழி – ஆற்றிலிருந்து

(ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்)

கலித்தாழிசை

 

213 :

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை

சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு

காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு

மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்

வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2) 1.

 

214:

குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ

எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த

வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு

விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்

வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும். 2.

 

215:

தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி

விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து

படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு

உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்

உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். 3.

 

216:

தேனுகனாவி செகுத்து பனங்கனி

தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்

வானவர்கோன்விட வந்தமழைதடுத்து

ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்

அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும். 4.

 

217:

ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு

பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு

வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு

ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்

அடியுண்டழுதானால்இன்றுமுற்றும். 5.

 

218:

தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்

உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி

கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்

துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்

துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். 6.

 

219:

மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று

மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை

ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே

தாவடியிட்டானால்இன்றுமுற்றும்

தரணியளந்தானால்இன்றுமுற்றும். 7.

 

220:

தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்

வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்

வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்

ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்

அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும். 8.

 

221:

வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்

கானத்துமேய்ந்து களித்துவிளையாடி

ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை

தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்

தரணியிடந்தானால்இன்றுமுற்றும். 9.

 

தரவு கொச்சகக்கலிப்பா

 

222:

அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு

மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட

அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல்

இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2) 10.

 

Leave a Reply