திருவாய்மொழி நான்காம் பத்து

நம்மாழ்வார்

 

 

style="text-align: center;">4ஆம் பத்து 3 ஆம் திருவாய்மொழி

3145

கோவை வாயாள் பொருட்டேற்றின்எருத்தம் இறுத்தாய் மதிளிலங்கைக்

கோவை வீயச் சிலைகுனித்தாய் குலநல் யானை மருப்பொசித்தாய்

பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கே னேலும்நின்

பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தென் னெஞ்சமே. (2) 4.3.1

 

3146

பூசும் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய

வாச கம்செய் மாலையே வான்பட் டாடை யுமஃதே

தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே

ஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை யேக மூர்த்திக்கே. 4.3.2

 

3147

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி

ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி

நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனேஉன்

ஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே. 4.3.3

 

3148

மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப் பேயுயிர்

மாய்த்த ஆய மாயனே வாம னனே மாதவா

பூத்தண் மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கே னேலும்நின்

பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே. 4.3.4

 

3149

கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா

எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே

நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே

கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே. 4.3.5

 

3150

கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்

ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே. என்றென்று

ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்

கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே. 4.3.6

 

3151

குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா

குரைக ழல்கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே

விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்உன்

உரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே. 4.3.7

 

3152

என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்

துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்

உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்

இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே? 4.3.8

 

3153

உரைக்க வல்லேன் அல்லேனுன்உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்

கரைக்கண் என்று செல்வன்நான்?காதல் மையல் ஏறினேன்

புரைப்பி லாத பரம்பரனே. பொய்யி லாத பரஞ்சுடரே

இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன். 4.3.9

 

3154

யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி பின்னையும்

தானும் ஏத்தி லும்தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்

தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப

யானு மெம்பி ரானையே ஏத்தி னேன்யா னுய்வானே. 4.3.10

 

3155

உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல்

செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்

பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்

வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2) 4.3.11

Leave a Reply