குருபெயர்ச்சி பலன்கள் 2010

விழாக்கள் விசேஷங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் – 2010-2011

கடகம்:

குரு பகவான் உங்களின் அஷ்டம ஸ்தானமான கும்ப ராசியிலிருந்து பாக்ய ஸ்தானமான மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்த பாக்ய ஸ்தான சஞ்சாரத்தில் நிலம், வீடு போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். மனதிற்கு இனிய பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். ஒன்றுக்கு இரண்டாக லாபம் தரும் அதிர்ஷ்ட முதலீடுகளைச் செய்வீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரத் தொடங்கும். எதிர்கால முன்னேற்றத்திற்காக இப்போதே சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும்.

குரு பகவானின் ஐந்தாம் இடப் பார்வை உங்கள் ராசியின் மீது படிவதால், தெளிவாகச் சிந்தித்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பீர்கள். தேவையான அளவு வருமானம் கிடைக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவீர்கள். அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போலாகும். அதேநேரம் மற்றவர்களின் வழக்கு விவகாரங்களில் தலையிடக் கூடாது.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் தைரிய ஸ்தான ராசியின் மீதும், அங்கு சுப பலத்துடன் அமர்ந்துள்ள சனி பகவான் மீதும் படிவதால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் சமாதானமாகி இணக்கமாகப் பழகுவார்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் பூஜைகளும், ஜபங்களும் கைமேல் பலனளிக்கும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

குரு பகவானின் அருட்பார்வை உங்களின் பூர்வ புண்ய, புத்திர, புத்தி ராசியின் மீது படிவதால் முன்னோர்கள் சம்பாதித்த சொத்துக்கள் உங்கள் கையை வந்தடையும். அதிலிருந்து வருமானமும் வரத் தொடங்கும். உங்கள் குறிக்கோள்களை சுலபமாக எட்டிவிடுவீர்கள். குழந்தைகளை இன்பச் சுற்றுலா செல்ல அனுமதிப்பீர்கள். எதிர்வரும் ஆபத்துகளை உள்ளுணர்வால் புரிந்துகொண்டு அவை உங்களைத் தாக்காமல் காப்பாற்றிக் கொள்வீர்கள். சுய முயற்சி செய்து உயர்ந்த நிலைக்கு வந்துவிடும் கால கட்டம் இது.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். அலுவலகத்தில் அனைவரிடமும் நன்றாகப் பழகுவீர்கள். உங்கள் வேலைகளை கவனம் சிதறாமல் பட்டியலிட்டுச் செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு சில சலுகைகளையும் பெறுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை அடைவீர்கள்.

வியாபாரிகளின் பேச்சில் வசீகரம் கூடும். வாணிபம் சூடுபிடிக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். எல்லா நிலைகளிலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். போட்டியாளர்களின் சதியை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி, வருமானம் பெருகும். பழைய குத்தகை பாக்கிகளும் வசூலாகும். கைநழுவிப் போன குத்தகை திரும்பக் கிடைக்கும். அதேநேரம் கால்நடை பராமரிப்புக்கு சற்று கூடுதல் செலவு செய்ய வேண்டிவரும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியிலும், வெளியிலும் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள். சந்தோஷம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். எதிர்கட்சியினரின் நடவடிக்கைகளை முன் கூட்டியே அறிந்துகொண்டு அதற்கேற்ப எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள்.

கலைத்துறையினர், உயர்ந்தவர்களை சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கும் செலவு செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும்.

பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருட்களை வாங்கி ஆனந்தம் அடைவீர்கள். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். விருந்துகளில் கலந்துகொள்வீர்கள். அதேநேரம் அறிமுகமில்லாதவர்களை நம்ப வேண்டாம். எவரிடமும் அனாவசியப் பேச்சு வேண்டாம்.

மாணவமணிகளுக்குக் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய மொழிகளைக் கற்க ஆசைப்படுவீர்கள். சிலருக்கு உயர் கல்வி படிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளி விளையாட்டுகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள்.

பரிகாரம்: ராம  பிரானையும், பக்த அனுமனையும் வழிபடவும். தினமும், இயன்ற வரை “ராம! ராம’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் நற்பலன்கள், பல மடங்காகப் பெருகும்.

 

Leave a Reply