(பியாகடை ராகம் – திருபுடை தாளம்)
782:
காலநேமி காலனே. கணக்கிலாத கீர்த்தியாய்,
ஞாலமேழு முண்டுபண்டோர் பாலனாய பண்பனே,
வேலைவேவ வில்வளைத்த வெல்சினத்த வீர,நின்
பாலராய பத்தர்சித்தம் முத்திசெய்யும் மூர்த்தியே. (3 1)
783:
குரக்கினப்ப டைகொடுகு ரைகடலின் மீதுபோய்
அரக்கரங்க ரங்கவெஞ்ச ரந்துரந்த வாதிநீ,
இரக்கமண்கொ டுத்தவற்கி ரக்கமொன்று மின்றியே,
பரக்கவைத்த ளந்துகொண்ட பற்பபாத னல்லையே? (32)
784:
மின்னிறத்தெ யிற்றரக்கன் வீழவெஞ்ச ரம்துரந்து,
பின்னவற்க ருள்புரிந்த ரசளித்த பெற்றியோய்,
நன்னிறத்தொ ரிஞ்சொலேழை பின்னைகேள்வ. மன்னுசீர்,
பொன்னிறத்த வண்ணானாய புண்டரீக னல்லையே? (33)
785:
ஆதியாதி யாதிநீயொ ரண்டமாதி யாதலால்,
சோதியாத சோதிநீஅ துண்மையில்வி ளங்கினாய்,
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே? (34)
786:
அம்புலாவு மீனுமாகி யாமையாகி ஆழியார்,
தம்பிரானு மாகிமிக்க தன்புமிக்க தன்றியும்
கொம்பராவு நுண்மருங்கு லாயர்மாதர் பிள்ளையாய்
எம்பிரானு மாயவண்ண மென்கொலோவெம் மீசனே. (35)
787:
ஆடகத்த பூண்முலைய சோதையாய்ச்சி பிள்ளையாய்
சாடுதைத்தோர் புள்ளதாவி கள்ளதாய பேய்மகள்
வீடுவைத்த வெய்யகொங்கை ஐயபால முதுசெய்து,
ஆடகக்கை மாதர்வா யமுதமுண்ட தென்கொலோ? (36)
788:
காய்த்தநீள்வி ளங்கனியு திர்த்தெதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து,மாபி ளந்தகைத்த லத்தகண்ண னென்பரால்
ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை யுண்டுவெண்ணெ யுண்டு,பின்
பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ ரேனமாய வாமனா. (37)
789:
கடங்கலந்த வன்கரிம ருப்பொசித்துஓர் பொய்கைவாய்,
விடங்கலந்த பாம்பின்மேல்ந டம் பயின்ற நாதனே
குடங்கலந்த கூத்தனாய கொண்டல்வண்ண. தண்டுழாய்,
வடங்கலந்த மாலைமார்ப. காலநேமி காலனே. (38)
790:
வெற்பெடுத்து வேலைநீர்க லக்கினாய்அ தன்றியும்,
வெற்பெடுத்து வேலைநீர்வ ரம்புகட்டி வேலைசூழ்,
வெற்பெடுத்த இஞ்சிசூழி லங்கைகட்ட ழித்தநீ
வெற்பெடுத்து மாரிகாத்த மேகவண்ண னல்லையே. (39)
791:
ஆனைகாத்தொ ரானைகொன்ற தன்றியாயர் பிள்ளையாய்,
ஆனைமேய்த்தி யானெயுண்டி அன்றுகுன்ற மொன்றினால்,
ஆனைகாத்து மையரிக்கண் மாதரார்தி றத்து,முன்
ஆனையன்று சென்றடர்த்த மாயமென்ன மாயமே? (40)