பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து

பெரியாழ்வார்

 

எட்டாம் திருமொழி — பொன்னியல்

(அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)

கலித்தாழிசை

97:

பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி

தன்னியலோசை சலஞ்சலனென்றிட

மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்

என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ

எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. (2) 1.

 

98:

செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்

பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப

சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய

அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ

ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. 2.

 

 

99:

பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து

நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு

அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த

அஞ்சனவண்ணனே. அச்சோவச்சோ

ஆயர்பெருமானே. அச்சோவச்சோ. 3 .

 

100:

நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன

தேறிஅவளும் திருவுடம்பில்பூச

ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று

ஏறவுருவினாய். அச்சோவச்சோ

எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. 4.

 

101:

கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி

எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும்

சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை

அழலவிழித்தானே. அச்சோவச்சோ

ஆழியங்கையனே. அச்சோவச்சோ. 5.

 

102:

போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்

தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய்

காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே.

ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ

ஆயர்கள்போரேறே. அச்சோவச்சோ. 6.

 

103:

மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்

தக்கதிதன்றென்று தானம்விலக்கிய

சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய

சக்கரக்கையனே. அச்சோவச்சோ

சங்கமிடத்தானே. அச்சோவச்சோ. 7.

 

104:

என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன்

முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன

மன்னுநமுசியை வானில்சுழற்றிய

மின்னுமுடியனே. அச்சோவச்சோ

வேங்கடவாணனே. அச்சோவச்சோ. 8.

 

105:

கண்டகடலும் மலையும்உலகேழும்

முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ. அன்று

இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள

மண்டைநிறைத்தானே. அச்சோவச்சோ

மார்வில்மறுவனே. அச்சோவச்சோ. 9.

 

106:

துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட

மன்னியநான்மறை முற்றும்மறைந்திட

பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று

அன்னமதானானே. அச்சோவச்சோ

அருமறைதந்தானே. அச்சோவச்சோ. 10.

 

தரவு கொச்சகக்கலிப்பா

 

107:

நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை

அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன

மச்சணிமாடப் புதுவைகோன்பட்டன்சொல்

நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2) 11.

 

 

Leave a Reply