பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து

பெரியாழ்வார்

 

1ஆம் பத்து 3 ஆம் திருமொழி

மூன்றாம் திருமொழி – மாணிக்கம் கட்டி

(கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்)

கலித்தாழிசை

 

44:

மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி

ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்

பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்

மாணிக்குறளனே. தாலேலோ

வையமளந்தானே. தாலேலோ. (2) 1.

 

45:

உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ

இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு

விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்

உடையாய். அழேல்அழேல்தாலேலோ

உலகமளந்தானே. தாலேலோ. 2.

 

46:

என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு

சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு

இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி

தந்துஉவனாய்நின்றான்தாலேலோ

தாமரைக்கண்ணனே. தாலேலோ. 3.

 

47:

சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்

அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்

அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்

செங்கண்கருமுகிலே. தாலேலோ

தேவகிசிங்கமே. தாலேலோ. 4.

 

48:

எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று

அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு

வழுவில்கொடையான் வயிச்சிரவணன்

தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ

தூமணிவண்ணனே. தாலேலோ. 5.

 

49:

ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்

சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்

மாதக்கவென்று வருணன்விடுதந்தான்

சோதிச்சுடர்முடியாய். தாலேலோ

சுந்தரத்தோளனே. தாலேலோ. 6.

 

50:

கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்

வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்

தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்

கோனே. அழேல்அழேல்தாலேலோ

குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. 7.

 

51:

கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை

உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ

அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்

நச்சுமுலையுண்டாய். தாலேலோ

நாராயணா. அழேல்தாலேலோ. 8.

 

52:

மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்

செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்

வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்

அய்யா. அழேல்அழேல்தாலேலோ

அரங்கத்தணையானே. தாலேலோ. 9.

 

தரவு கொச்சகக் கலிப்பா

 

53:

வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட

அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய

செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்

எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2) 10.

 

 

Leave a Reply