பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து

பெரியாழ்வார்

 

 

ஒன்பதாம் திருமொழி – வட்டநடுவே

(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால்வந்த கலித்தாழிசை

 

108:

வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க

மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்

சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என்

குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்

கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2) 1.

 

109:

கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில்

கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி

தன்கணத்தாலே சதிராநடந்துவந்து

என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்

எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 2.

 

110:

கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்

ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்

கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய

அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்

ஆயர்களேறுஎன்புறம்புல்குவான். 3 .

 

111:

நாந்தகமேந்திய நம்பிசரணென்று

தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்

வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்

ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்

உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 4.

 

112:

வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி

கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்

பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு

மண்பலகொண்டான்புறம்புல்குவான்

வாமனன்என்னைப்புறம்புல்குவான். 5.

 

113:

சத்திரமேந்தித் தனியொருமாணியாய்

உத்தரவேதியில் நின்றஒருவனை

கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட

பத்திராகாரன்புறம்புல்குவான்

பாரளந்தான்என்புறம்புல்குவான். 6.

 

114:

பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி

தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்

மெத்தத்திருவயிறார விழுங்கிய

அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்

ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 7.

 

115:

மூத்தவைகாண முதுமணற்குன்றேறி

கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி

வாய்த்தமறையோர் வணங்க இமையவர்

ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்

எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 8.

 

116:

கற்பகக்காவு கருதியகாதலிக்கு

இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில்

நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்

உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்

உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 9.

 

தரவு கொச்சகக்கலிப்பா

 

117:

ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய

வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து

ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்

வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2) 10.

 

 

Leave a Reply