கண்ணிநுண்சிறுத்தாம்பு

மதுரகவியாழ்வார்

ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த

கண்ணி நுண்சிறுத்தாம்பு


கண்ணி நிண்சிறுத்தாம்புத் தனியன்கள்


ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை


அவிதித விஷயாந்தரச் சடாரேர்
உபநிஷதாம் உபகாந மாத்ர போக:
அபிச குணவஸாத் ததேக ஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.


இருகவிற்ப நேரிசை வெண்பா


வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறுஎங்கள்
வாழ்வாம்என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்.


ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த

 

கண்ணி நுண்சிறுத்தாம்பு


93 7:
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்,
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்,
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே. (2) (1)

938:
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே,
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி,
பாவின் இன்னிசை பாடித் திரிவனே. (2)

939:
திரிதந்து ஆகிலும் தேவ பிரானுடை,
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்,
பெரிய வண் குருகூர்நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே. (3)

940:
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள்,
புன்மையாகக் கருதுவர் ஆதலின்,
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே. (4)

941:
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்,
நம்பினேன் மடவாரையும் முன்னெல்லாம்,
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே. (5)

942:
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்,
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்,
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி,
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே. (6)

943:
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்,
பண்டை வல்வினை பாற்றி அருளினான்,
எண் திசையும் அறிய இயம்புகேன்,
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே. (7)

944:
அருள் கொண்டு ஆடும் அடியவர் இன்புற,
அருளினான் அவ் அருமறையின் பொருள்,
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ்ப்  பாடினான்,
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே. (8)

945:
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்,
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே? (9)

946:
பயன் நன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்,
குயில் நின்றார்ப் பொழில் சூழ் குருகூர் நம்பி,
முயல்கின்றேன் உன் தன் மொய்கழற்கு அன்பையே. (2) (10)

947:
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன், தென் குருகூர் நகர் நம்பிக்கு,
அன்பனாய் மதுரகவி சொன்னசொல்
நம்புவார்ப் பதி வைகுந்தம் காண்மினே. (2) (11)

 

ஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்

Leave a Reply