style="text-align: center;">7ஆம் பத்து 2ஆம் திருவாய்மொழி
3464
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்கு சக்கரங்கள் என்றுகை கூப்பும்
தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்.
இவள்திறத்து என்செய்கின் றாயே? (2) 7.2.1
3465
என்செய்கின் றாய் என் தாமரைக் கண்ணா. என்னும்
கண் ணீர்மல்க இருக்கும்,
என்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்? என்னும்
வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்
முன்செய்த வினையே. முகப்படாய் என்னும்
முகில்வண்ணா. தகுவதோ? என்னும்,
முன்செய்திவ் வுலகம் உண்டுமிழ்ந் தளந்தாய்.
எங்கொலோ முடிகின்றது இவட்கே? 7.2.2
3466
வட்கிலள் இறையும் மணிவண்ணா. என்னும்
வானமே க்கும்மை யாக்கும்,
உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட
ஒருவனே. என்னுமுள் ளுருகும்,
கட்கிலீ. உன்னைக் காணுமா றருளாய்
காகுத்தா. கண்ணனே. என்னும்,
திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்.
இவள்திறத் தென்செய்திட் டாயே? 7.2.3
3467
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்
எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,
கட்டமே காதல். என்றுமூர்ச் சிக்கும்
கடல்வண்ணா. கடியைகாண் என்னும்,
வட்டவாய் நேமி வலங்கையா. என்னும்
வந்திடாய் என்றென்றே மயங்கும்,
சிட்டனே. செழுநீர்த் திருவரங் கத்தாய்.
இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே? 7.2.4
3468
சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும்
திருவரங் கத்துள்ளாய். என்னும்
வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க
வந்திடாய் என்றென்றே மயங்கும்,
அந்திப்போ தவுணன் உடலிடந் தானே.
அலைகடல் கடைந்தவா ரமுதே,
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல்செய் தானே. 7.2.5
3469
மையல்செய் தென்னை மனம்கவர்ந் தானே. என்னும்
மா மாயனே. என்னும்,
செய்யவாய் மணியே. என்னும் தண் புனல்சூழ்
திருவரங் கத்துள்ளாய் என்னும்,
வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில் ஏந்தும்
விண் ணோர்முதல். என்னும்,
பைகொள்பாம் பணையாய். இவள்திறத் தருளாய்
பாவியேன் செய்யற்பா லதுவே. 7.2.6
3470
பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்.
பற்றிலார் பற்றநின் றானே,
காலசக் கரத்தாய். கடலிடங் கொண்ட
கடல்வண்ணா. கண்ணணே. என்னும்,
சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்னும்
என் தீர்த்தனே. என்னும்,
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்
என்னுடைக் கோமளக் கொழுந்தே. 7.2.7
3471
கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக்
கோநிரை காத்தவன். என்னும்,
அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும்
அஞ்சன வண்ணனே. என்னும்,
எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும்
எங்ஙனே நோக்குகேன்? என்னும்,
செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய்.
என்செய்கேன் என்திரு மகட்கே? 7.2.8
3472
என்திரு மகள்சேர் மார்வனே. என்னும்
என்னுடை யாவியே. என்னும்,
நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட
நிலமகள் கேள்வனே. என்னும்,
அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட
ஆய்மகள் அன்பனே. என்னும்,
தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே.
தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. (2) 7.2.9
3473
முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும்
மூவுல காளியே. என்னும்,
கடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும்
நான்முகக் கடவுளே. என்னும்,
வடிவுடை வானோர் தலைவனே. என்னும்
வண்திரு வரங்கனே. என்னும்,
அடியடை யாதாள் போலிவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே. 7.2.10
3474
முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ்
வண்குரு கூர்ச்சட கோபன்,
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை
ஆயிரத் திப்பத்தும் வல்லார்,
முகில்வண்ண வானத் திமையவர் சூழ
இருப்பர்பே ரின்பவெள் ளத்தே. (2) 7.2.11