திருவாய்மொழி ஆறாம் பத்து

நம்மாழ்வார்

திருவாய்மொழி ஆறாம் பத்து

style="text-align: center;">6ஆம் பத்து 1 ஆம் திருவாய்மொழி

3343

வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,

செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,

கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,

கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே. 6.1.1

 

3344

காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய்,

வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர்,

நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு,

பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே. 6.1.2

 

3345

திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள்,

சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும்,

கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு,

இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே. 6.1.3

 

3346

இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள்,

விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர்,

கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு,

உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே. 6.1.4

 

3347

உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,

திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,

புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,

புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே. 6.1.5

 

3348

போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில்காள்,

சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும்,

ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு,

மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே. 6.1.6

 

3349

ஒருவண் ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே,

செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர்,

கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்,

செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே. 6.1.7

 

3350

திருந்தக் கண்டெனக் கொன்றுரை யாயொண் சிறுபூவாய்.

செருந்தி ஞாழல் மகிழ்புன்னை சூழ்தண் டிருவண்வண்டூர்,

பெருந்தண் தாமரைக் கண்பெரு நீண்முடி நாள்தடந்தோள்,

கருந்திண் மாமுகில் போல்திரு மேனி யடிகளையே. 6.1.8

 

3351

அடிகள் கைதொழு தலர்மேல் அசையும் அன்னங்காள்,

விடிவை சங்கொலிக் கும்திரு வண்வண் டூருறையும்,

கடிய மாயன்தன் னைக்கண்ணனை நெடு மாலைக்கண்டு,

கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே. 6.1.9

 

3352

வேறு கொண்டும்மை யானிரந் தேன்வெறி வண்டினங்காள்,

தேறு நீர்ப்பம் பைவட பாலைத் திருவண்வண்டூர்,

மாறில் போரரக் கன்மதிள் நீறெழச் செற்றுகந்த,

ஏறுசேவக னார்க்கென்னை யுமுளள் என்மின்களே. 6.1.10

 

3353

மின்கொள் சேர்புரி நூல்குற ளாயகல் ஞாலம்கொண்ட,

வன்கள் வனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,

பண்கொள் ஆயிரத் துள்ளிவை பத்தும் திருவண்வண்டூர்க்கு,

இன்கொள் பாடல் வல்லார் மதனர்மின் னிடையவர்க்கே. 6.1.11

Leave a Reply