6ஆம் பத்து 5 ஆம் திருவாய்மொழி
தொலைவில்லி மங்கலப் பெருமானிடம் ஈடுபட்ட தலைவியின் நிலை பற்றித் தாய்மாரிடம் தோழி கூறுதல்!
துவள் இல் மாமணிமாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்கு ஆசை இல்லை; விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே. 6-5-1
குமுறும் ஓசை விழவு ஒலித் தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்; மற்று இவள் தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு, ஒசிந்து, கரையுமே. 6-5-2
கரைகொள் பைம்பொழில் தண் பணைத் தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
உரைகொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்நீர் மல்க நிற்குமே. 6-5-3
நிற்கும் நான்மறைவாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்டபின்
அற்கம் ஒன்றும் அற உறாள்; மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி எல்லாம் கருங்கடல் வண்ணன், கண்ணபிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள்; உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே! 6-5-4
குழையும் வாள் முகத்து ஏழையைத் தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்;
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று தொட்டும் மையாந்து இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர்! தொழும் அத்திசை உற்று நோக்கியே! 6-5-5
நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம்
நோக்குமேல் அத்திசை அல்லால், மறு நோக்கு இலள்; வைகல் நாள்தொறும்
வாய்க்கொள் வாசகமும் மணிவண்னன் நாமமே இவள் அன்னைமீர்! 6-5-6
அன்னைமீர்! அணிமாமயில் சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ? அவன்
சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே! 6-5-7
திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண்தொலைவில்லிமங்கலம்
கருந்தடம் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்து இருந்து அரவிந்தலோசன! என்று என்றே நைந்து இரங்குமே! 6-5-8
இரங்கிநாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ணநீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணவோ என்று கூவுமால்;
துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் என்றுதன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதன் பின்னையே! 6-5-9
பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல், பிறந்திட்டாள்?
என்ன மாயம்கொலோ! இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்;
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும்; அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே! 6-5-10
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண்குருகூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லிமங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ்ப் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே! 6-5-11