திருவாய்மொழி ஆறாம் பத்து

நம்மாழ்வார்

 

 

style="text-align: center;">6ஆம் பத்து 5 ஆம் திருவாய்மொழி

 

தொலைவில்லி மங்கலப் பெருமானிடம் ஈடுபட்ட தலைவியின் நிலை பற்றித் தாய்மாரிடம் தோழி கூறுதல்!

துவள் இல் மாமணிமாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம் தொழும்

இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்கு ஆசை இல்லை; விடுமினோ

தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்

குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே. 6-5-1

 

குமுறும் ஓசை விழவு ஒலித் தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு

அமுத மென்மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்

திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்; மற்று இவள் தேவ தேவபிரான் என்றே

நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு, ஒசிந்து, கரையுமே. 6-5-2

 

கரைகொள் பைம்பொழில் தண் பணைத் தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு

உரைகொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்

திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்

நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்நீர் மல்க நிற்குமே. 6-5-3

 

நிற்கும் நான்மறைவாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்டபின்

அற்கம் ஒன்றும் அற உறாள்; மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!

கற்கும் கல்வி எல்லாம் கருங்கடல் வண்ணன், கண்ணபிரான் என்றே

ஒற்கம் ஒன்றும் இலள்; உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே! 6-5-4

 

குழையும் வாள் முகத்து ஏழையைத் தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு

இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்;

மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று தொட்டும் மையாந்து இவள்

நுழையும் சிந்தையள் அன்னைமீர்! தொழும் அத்திசை உற்று நோக்கியே! 6-5-5

 

நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை

வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம்

நோக்குமேல் அத்திசை அல்லால், மறு நோக்கு இலள்; வைகல் நாள்தொறும்

வாய்க்கொள் வாசகமும் மணிவண்னன் நாமமே இவள் அன்னைமீர்! 6-5-6

 

அன்னைமீர்! அணிமாமயில் சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து

என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்

முன்னம் நோற்ற விதிகொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ? அவன்

சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே! 6-5-7

 

திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும் தாம் மலிந்து

இருந்து வாழ் பொருநல் வடகரை வண்தொலைவில்லிமங்கலம்

கருந்தடம் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்

இருந்து இருந்து அரவிந்தலோசன! என்று என்றே நைந்து இரங்குமே! 6-5-8

 

இரங்கிநாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ணநீர்கள் அலமர

மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணவோ என்று கூவுமால்;

துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் என்றுதன்

கரங்கள் கூப்பித் தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதன் பின்னையே! 6-5-9

 

பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல், பிறந்திட்டாள்?

என்ன மாயம்கொலோ! இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்;

முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லிமங்கலம்

சென்னியால் வணங்கும்; அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே! 6-5-10

 

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே

தந்தை தாய் என்று அடைந்த வண்குருகூரவர் சடகோபன்

முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லிமங்கலத்தைச் சொன்ன

செந்தமிழ்ப் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே! 6-5-11

 

 

 

 

Leave a Reply