style="text-align: center;">6ஆம் பத்து 6ஆம் திருமொழி
1498
அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும்
அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்,
கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடிகிற்பீர்,
வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு,
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.1)
1499
கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம்
குலவரையின் மீதோடி யண்டத்தப்பால்,
எழுந்தினிது விளையாடு மீச னெந்தை
இணையடிக்கீ ழினிதிருப்பீர் இனவண்டாலும்
உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி
உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள,
செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.2)
1500
பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப்
பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா
செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்
கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக்
கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற
தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.3)
1501
பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப்
பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி
அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம்
அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்
வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற
விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.4)
1502
அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர்
அரியுருவா யிரணியன தாகங்கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு
விருந்தாவீர் மேலெழுந்து விலங்கல் பாய்ந்து
பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப்
புலம்பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடன்
தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.5)
1503
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த்
தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்,
தன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த்
தானாய னாயினான் சரணென்றுய்வீர்
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை
விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.6)
1504
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி
முதுதுவரைக் குலபதியாக் காலிப்பின்னே
இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர்
இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர்
மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய
வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன்
சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.7)
1505
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்
மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்
செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன்
சிரந்துணிந்தான் திருவடி_ம் சென்னிவைப்பீர்
இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு
எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.8)
1506
தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல்
தனியாளன் முனியாள ரேத்தநின்ற
பேராளன் ஆயிரம்பே ருடைய வாளன்
பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்,
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற
படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.9)
1507
செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும்
திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை
பொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன்
புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த
அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல்
பாடுவார் வியனுலகில் நமனார்பாடி
வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே (6.6.10)