முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார்


2142:

உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்

விலகு கருங்கடலும் வெற்பும், – உலகினில்

செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்

புந்தியி லாய புணர்ப்பு. 61

 

2143 :

புணர்மருதி னூடுபோய்ப் பூங்குருந்தம் சாய்த்து,

மணமருவ மால் விடையேழ் செற்று, – கணம்வெருவ

ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்,

சூழரவப் பொங்கணையான் தோள். 62

 

2144:

தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,

கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், – நாநாளும்

கோணா கணையான் கூரைகழலே கூறுவதே,

நாணாமை நள்ளேன் நயம். 63

 

2145:

நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,

உயவேன் உயர்ந்தவரோ டல்லால், – வியவேன்

திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,

வருமாறென் நம்மேல் வினை? 64

 

2146:

வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,

தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், – நினைதற்

கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்

கரியானைக் கைதொழுதக் கால். 65

 

2147:

காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த

மேலைத் தலைமறையோர் வேட்பனவும், – வேலைக்கண்

ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,

பேராழி கொண்டான் பெயர். 66

 

2148:

பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ

உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்

தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,

ஒருவனையே நோக்கும் உணர்வு. 67

 

2149:

உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,

உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார்

விண்ணகத்தாய். மண்ணகத்தாய். வேங்கடத்தாய் நால்வேதப்

பண்ணகத்தாய். நீகிடந்த பால்? 68

 

2150:

பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்

மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், – ஆலன்று

வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ?

சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு. 69

 

2151:

சொல்லுந் தனையும் தொழுமின் விழுமுடம்பு,

சொல்லுந் தனையும் திருமாலை, – நல்லிதழ்த்

தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,

நாமத்தால் ஏத்திதிரேல் நன்று. 70

Leave a Reply