முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார்


2102:

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,

சென்று திசையளந்த செங்கண்மாற்கு, – என்றும்

படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,

அடையாழி நெஞ்சே. அறி. 21

 

2103 :

அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,

பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், – வெறிகமழும்

காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,

தாம்பேகொண் டார்த்த தழும்பு. 22

 

2104:

தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை,

தழும்பிருந்த தாள்சகடம் சாடி, – தழும்பிருந்த

பூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த,

வீங்கோத வண்ணர் விரல். 23

 

2105:

விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி

உரலோ டுறப்பிணித்த ஞான்று – குரலோவா

தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே?,

ஓங்கோத வண்ணா. உரை. 24

 

2106:

உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப் போதும்

வரைமேல் மரகதமே போல, – திரைமேல்

கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி

இடந்தானை யேத்தி யெழும். 25

 

2107:

எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,

வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார்,

வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்

மனச்சுடரைத் தூண்டும் மலை. 26

 

2108:

மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,

சிலையால் மராமரமேழ் செற்று, – கொலையானைப்

போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்

காக்கோடு பற்றியான் கை. 27

 

2109:

கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்

தைய. மலர்மகள்நின் னாகத்தாள், – செய்ய

மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த

இறையான்நின் ஆகத் திறை. 28

 

2110:

இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,

அறைபுனலும் செந்தீயு மாவான், – பிறைமருப்பின்

பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,

செங்கண்மால் கண்டாய் தெளி. 29

 

2111:

தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்

தெளிதாக நன்குணர்வார் சிந்தை, – எளிதாகத்

தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,

போய்நாடிக் கொள்ளும் புரிந்து. 30

Leave a Reply