முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார்

2172:

ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,

ஞானச் சுடர்கொளீஇ நாடோ றும், – ஏனத்

துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,

மருவாதார்க் குண்டாமோ வான்? 91

 

2173 :

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்

தேனாகிப் பாலாம் திருமாலே, – ஆனாய்ச்சி

வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்

மண்ணை உமிழ்ந்த வயிறு? 92

 

2174:

வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச

எயிறிலக வாய்மடுத்த தென்நீ, – பொறியுகிரால்

பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்

சேவடிமே லீடழியச் செற்று? 93

 

2175:

செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,

மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும்

மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,

இறையேனும் ஏத்தாதென் நா. 94

 

2176:

நாவாயி லுண்டே நமோநார ணா என்று,

ஓவா துரைக்கு முரையுண்டே, – மூவாத

மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்

தீக்கதிக்கட் செல்லும் திறம்? 95

 

2177:

திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,

அறம்பாவ மென்றிரண்டு மாவான், புறந்தானிம்

மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,

கண்டாய் கடைக்கட் பிடி. 96

 

2178:

பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்

அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, – பொடிசேர்

அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,

புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்? 97

 

2179:

பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,

நின்றுலகம் தாய நெடுமாலும், – என்றும்

இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்

ஒருவனங்கத் தென்று முளன். 98

 

2180:

உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்

உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய்,

வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,

உள்ளத்தி னுள்ளனென் றோர். 99

 

2181:

ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,

ஈரடியும் காணலா மென்னெஞ்சே. – ஓரடியில்

தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,

மாயவனை யேமனத்து வை. (2) 100

பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்

Leave a Reply