திருமாலை

தொண்டரடிப்பொடியார்

902:

தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்,
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்,
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்,
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே. (3 1)

903:
ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள்,
கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே. உன்னைக் காணும்,
மார்க்கமொ றறிய மாட்டா மனிசரில் துரிச னாய,
மூர்க்கனேன் வந்து நின்றேன், மூர்க்கனேன் மூர்க்க னேனே. (32)

904:
மெய்யெல்லாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு,
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்,
ஐயனே. அரங்க னே.உன் அருளென்னு மாசை தன்னால்,
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே. (33)

905:
உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா,
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று,
வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே. (34)

906:
தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்,
சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே,
ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்,
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே. (35)

907:
மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே.மதுர வாறே,
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு,
உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே,உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி. அரங்கமா நகரு ளானே. (36)

908:
தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்,
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்,
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்,
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே. (37)

909:
மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து,
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி,
காம்புறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்து,வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே. (2) (38)

910:
அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில்,
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய். மொய்கழற் கன்பு செய்யும்,
அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே. (39)

911:
திருமறு மார்வ.நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து,
மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும்,
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே. (40)

 

Leave a Reply