திருமாலை

தொண்டரடிப்பொடியார்

882:

ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய,
செருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார்,
மருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா,
கருவிலே திருவி லாதீர் காலத்தைக் கழிக்கின் றீரே. (11)

883 :
நமனும்முற் கலனும் பேச நரகில்நின் றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி,
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்,
கவலையுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே. (12)

884:
எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த,
அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில்,
பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே? (13)

885:
வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை,
அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா,
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே. (2) (14)

886:
மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல,
பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான்,
உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை,
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே? (15)

887:
சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்,
மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்து வேனை,
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து, தன்பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூ ரரங்க மன்றே? (16)

888:
விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை,
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே. (17)

889:
இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே,
தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான்,
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள்,
பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே. (18)

890:
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு,
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே. (2) (19)

891:
பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும்,
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்,
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே? (20)

 

 

Leave a Reply