ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த
திருமாலை
திருமாலை தனியன்
திருவரங்கப்பெருமாளரையர்  அருளிச்செய்தது
 
மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,-  உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும்  பேசு.
 
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த
திருமாலை
 
872:
காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட்  டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே,
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வ.நின் நாமம்  கற்ற,
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே. (2) (1)
873 
 :
பச்சைமா  மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே.  என்னும்,
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும்  வேண்டேன் அரங்கமா நகரு ளானே. (2) (2)
874:
வேதநூல் பிராயம்  நூறுமனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியு முறங்கிப் போகும்நின்றதில் பதினை  யாண்டு,
பேதைபா லகன தாகும்பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி  வேண்டேன்அரங்கமா நகரு ளானே. (3)
875:
மொய்த்தவல் வினையுள்  நின்றுமூன்றெழுத் துடைய பேரால்,
கத்திர பந்து மன்றேபராங்கதி கண்டு  கொண்டான்,
இத்தனை யடிய ரானார்க்கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று  மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே. (4)
876:
பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான்  பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது உடலுக்கே கரைந்து  நைந்து,
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடி,
தொண்டுபூண் டமுத  முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே. (5)
877:
மறம்சுவர் மதிளெ டுத்து  மறுமைக்கே வெறுமை பூண்டு,
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய  மாட்டீர்,
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே,
புறம்சுவர் கோலஞ்  செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே. (6)
878:
புலையற மாகி நின்ற புத்தொடு  சமண மெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்,
தலையறுப் புண்டும்  சாவேன் சத்தியங் காண்மின் ஐயா,
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவ னாவான்.  (7)
879:
வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள்,  நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில்  கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.  (8)
880:
மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்,
உற்றபோ தன்றி  நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ  மில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே.  (9)
881:
நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே,
காட்டினான்  திருவ ரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா  கனனும் நிற்க,
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே.  (10)



