style="text-align: center;">3ஆம் பத்து 6ஆம் திருமொழி
1198
தூவிரிய மலருழக்கித்
துணையோடும் பிரியாதே,
பூவிரிய மதுநுகரும்
பொறிவரிய சிறுவண்டே,
தீவிரிய மறைவளர்க்கும்
புகழாளர் திருவாலி,
ஏவரிவெஞ் சிலையானுக்
கென்னிலைமை யுரையாயே. (2) 3.6.1
1199
பிணியவிழு நறுநீல
மலர்க்கிழியப் பெடையோடும்,
அணிமலர்மேல் மதுநுகரும்
அறுகால சிறுவண்டே,
மணிகெழுநீர் மருங்கலரும்
வயலாலி மணவாளன்,
பணியறியேன் நீசென்றென்
பயலைநோ யுரையாயே. 3.6.2
1200
நீர்வானம் மண்ணெரிகா
லாய்நின்ற நெடுமால்,தன்
தாராய நறுந்துளவம்
பெருந்தகையெற் கருளானே,
சீராரும் வளர்ப்பொழில்சூழ்
திருவாலி வயல்வாழும்,
கூர்வாய சிறுகுருகே.
குறிப்பறிந்து கூறாயே. 3.6.3
1201
தானாக நினையானேல்
தன்னினைந்து நைவேற்கு,ஓர்
மீனாய கொடிநெடுவேள்
வலிசெய்ய மெலிவேனோ?
தேன்வாய வரிவண்டே.
திருவாலி நகராளும்,
ஆனாயற் கென்னுறுநோ
யறியச்சென் றுரையாயே. 3.6.4
1202
வாளாய கண்பனிப்ப
மென்முலைகள் பொன்னரும்ப
நாணாளும் நின்னினைந்து
நைவேற்கு,ஓமண்ணளந்த
தாளாளா தண்குடந்தை
நகராளா வரையெடுத்த
தோளாளா, என்றனக்கோர்
துணையாள னாகாயே. 3.6.5
1203
தாராய தண்டுளவ
வண்டுழுத வரைமார்பன்,
போரானைக் கொம்பொசித்த
புட்பாக னென்னம்மான்,
தேராரும் நெடுவீதித்
திருவாலி நகராளும்,
காராயன் என்னுடைய
கனவளையும் கவர்வானோ. 3.6.6
1204
கொண்டரவத் திரையுலவு
குரைகடல்மேல் குலவரைபோல்,
பண்டரவி னணைக்கிடந்து
பாரளந்த பண்பாளா,
வண்டமரும் வளர்ப்பொழில்சூழ்
வயலாலி மைந்தா,என்
கண்டுயில்நீ கொண்டாய்க்கென்
கனவளையும் கடவேனோ. 3.6.7
1205
குயிலாலும் வளர்ப்பொழில்சூழ்
தண்குடந்தைக் குடமாடி,
துயிலாத கண்ணிணையேன்
நின்னினைந்து துயர்வேனோ,
முயலாலு மிளமதிக்கே
வளையிழந்தேற்கு, இதுநடுவே
வயலாலி மணவாளா.
கொள்வாயோ மணிநிறமே. 3.6.8
1206
நிலையாளா நின்வணங்க
வேண்டாயே யாகினும்,என்
முலையாள வொருநாளுன்
னகலத்தால் ஆளாயே,
சிலையாளா மரமெய்த
திறலாளா திருமெய்ய
மலையாளா, நீயாள
வளையாள மாட்டோ மே. 3.6.9
1207
மையிலங்கு கருங்குவளை
மருங்கலரும் வயலாலி,
நெய்யிலங்கு சுடராழிப்
படையானை நெடுமாலை,
கையிலங்கு வேல்கலியன்
கண்டுரைத்த தமிழ்மாலை,
ஐயிரண்டு மிவைவல்லார்க்
கருவினைக ளடையாவே. (2) 3.6.10