e0af8de0ae9f-e0aeaae0aebfe0aeb0e0aebee0aea9e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">


வேலூர்….சிங்கிரி கோவில்!!!
வேலூரைச் சுற்றியுள்ள மலைக்கோவில்களில் இன்று 1400 வருட பழமை வாய்ந்த சிங்கிரிக்கோவிலின் வரலாறை தெரிந்து கொள்வோம்.
வேலூரிலிருந்து 25கிமீ தூரத்தில் உள்ளது சிங்கிரி கோவில்.கோவிலின் அடிவாரத்தில் நாகநதி ஓடுகிறது.ஒரு சிறிய தடுப்பணையும் உள்ளது.ஆற்றை கடந்தே கோவிலுக்கு செல்லமுடியும்.மழைக்காலங்களில் மட்டுமே ஆற்றில் நீர் வரத்து இருக்கும்.
ஸ்ரீ முதலாம் ராஜ நாராயண சம்புவராய மன்னர் கட்டிய ” ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் “
மலைமேல் கோவில் கொண்டுள்ள நரசிம்மரின் இராஜ கோபுரம் கோவிலின் பின்பக்கம் அமைத்துள்ளது.1400 வருடங்கள் பழமையான இந்தக்கோவில் மிக ரம்மியமான மலைகள் சூழ்ந்த பகுதியில் 80 அடி உயரமும் 100படிகளும் கொண்ட சிறிய மலையின்மீது அமைந்துள்ளது.

முதல் 50படிகள் ஏறியவுடன் உள்ள குன்றில்
பால ஆஞ்சநேயர் நம்மை வரவேற்கிறார்.
மேலே ஏறிச் சென்றால் கர்ப்ப கிரகமும் அர்த்தமண்டபமும் சேர்ந்து அமையப்பெற்ற மிகப்பெரிய கருவறையில் சுமார் ஆறடி உயர ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் நான்கு திருக்கைகளுடனும் மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரமும் இடது கையை தன் மடியின் மீதும் , வலது கையால் தன்து வலது திருமடியில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மி தாயாரை ஆலிங்கனம் செய்த வண்ணமும் சாந்த சொரூபியாய் காட்சியளிக்கிறார்.
இத்திருத்தலத்தின் கருவறையின் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் சம்புவராயர் மற்றும் விஜய நகர மன்னர்கள் ஆண்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். மேற்குறிப்பிட்ட கல்வெட்டில் இத்திருத்தலப் பெருமானை “அவுபள நாயனார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திருத்தலம் கி.பி. 8ம் நூற்றாண்டிலேயே திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற சிறப்பினை உடையதாகவும், கி.பி. 1337 – 1363 ஆம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்த முதலாம் சம்புவராய மன்னர் இராச நாராயணன் என்பவரால் கட்டட கோயிலாக கி.பி. 14ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகவும் கல்வெட்டுத் தகவலின்படி அறிய முடிகின்றது.
கி.பி. 1426 ஆம் ஆண்டினைச் சேர்ந்த விஜய நகர மன்னரின் கல்வெட்டு ஒன்றில் இவ்வூரினை ஓபிளம் எனவும், இறைவனை சிங்கபெருமாள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சிங்கிரி கோயில் என்பது சிங்க பெருமாள் கோயில்என்பதன் திரிபாகக் கருதப்படுகின்றது.
விஜய மகாராயர் குமாரர் சச்சிதானந்த உடையார் காலக் கல்வெட்டில் முருங்கைப்பற்றைச் சேர்ந்த மீனவராயன் செங்கராயன் என்பவன் திருவிளக்கு நிலம் தானம் அளித்த செய்தியைத் தருகிறது.

இத்திருத்தலம் கி.பி. 14ம் நூற்றாண்டில் முதலாம் சம்புவராய மன்னர் இராச நாராயணன் என்பவரால் கட்டட கோயிலாக நிர்மாணிக்கப்படுவதற்கு முன்பே, கி.பி. 8ம் நூற்றாண்டுகாலத்தில் சிறிய சன்னதியில் எழுந்தருளியிருந்து சேவைசாதித்து பக்தர்களாகிய நம் அனைவரையும் அனுக்கிரஹித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் இத்திருக்கோயில் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்ததும் (1400 years old), விஸ்தாரமான கருவறையுடன் தாயார் பெருமானின் வலது தொடையில் அமர்ந்து சேவை சாதித்தருளும் திருக்கோலம் மிகவும் அரிதான சிறப்பைப் பெற்ற திருக்கோலமாகும்.
- கோமதி அபி
தாயார் வலம் கொண்ட பிரான்! வேலூர் சிங்கிரி கோவில்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.