
குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்
துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்;
சொல்லும்நற் கவியை மெச்சார்
துர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும்
தூயரைத் தள்ளிவிடுவார்
இட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்
பென்னிலோ போய்ப்பணிகுவார்;
ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசை
என்னிலோ காலில் வீழ்வார்;
நட்டலா பங்களுக் குள்ளான பந்துவரின்
நன்றாக வேபே சிடார்;
நாளும்ஒப் பாரியாய் வந்தபுத் துறவுக்கு
நன்மைபல வேசெய் குவார்;
அட்டதிசை சூழ்புவியில் ஓங்குகலி மகிமைகாண்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தலைவனே!, அருமை தேவனே!,
எல்லோரும் தீய விகடக்
கவிஞனைப் புகழ்வார்கள், புகழ்ந்து
கூறத்தக்க நல்ல கவிஞனைப் புகழமாட்டார்கள், தீயவரை மனமகிழ்ச்சியுடன் ஆதரிப்பார்,
நல்லோரை ஆதரிக்கமாட்டார்கள், விருப்பமான தெய்வத்தை நினையார்,
பேய் என்றாற் சென்று
வணங்குவர், பெற்றோர்களைச்
சிறிதும் மதிக்கமாட்டார், பரத்தையென்றாற் காலில் விழுந்து
வணங்குவார், இன்பதுன்பங்களுக்கு உட்பட்ட உறவினர் வந்தால் மனம்
விட்டுப் பேசமாட்டார், ஒப்புக்கு வந்த புதிய உறவினர்க்கு எப்போதும்
பலவகை நலங்களும் புரிவர், (இவை) எட்டுத் திக்குகள் சூழ்ந்த உலகில் கலியுகத்தின்
பெருமை.
இக்கலிகாலத்தில் மக்களின் இயல்பானது.