style="text-align: center;">8ஆம் பத்து 6ஆம் திருவாய்மொழி
3618
எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. (2) 8.6.1
3619
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,
ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,
செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. 8.6.2
3620
ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,
உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,
திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,
மருவி யுரைகின்ற மாயப் பிரானே. 8.6.3
3621
மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே. 8.6.4
3622
கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை,
கோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம்,
கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ,
வைகுந்தம் கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே. 8.6.5
3623
கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும்,
மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை,
பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை,
ஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே. 8.6.6
3624
கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,
மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,
மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,
நண்ணு திருக்கடித் தான நகரே. 8.6.7
3625
தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும்,
வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே,
ஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும், தனதாயப் பதியே. 8.6.8
3626
தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும்,
மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை,
தேயத் தமரர் திருக்கடித் தானத்துள்,
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே. 8.6.9
3627
அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. 8.6.10
3628
சோலை திருக்கடித் தானத் துறைதிரு
மாலை, மதிள்குரு கூர்ச்சடகோபன்fசொல்,
பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும்,
மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே. (2) 8.6.11