பெருமாள் திருமொழி

குலசேகராழ்வார்

4ஆம் திருமொழி


தாவு கொச்சகக் கலிப்பா


677:
ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே (2) 4.1

678:
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே 4.2

679:
பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே 4.3

680:
ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே 4.4

681:
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே 4.5

682:
மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குடவா மருந்தவத்த னானவனே 4.6

683:
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே 4.7

684:
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே 4.8

685:
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே (2) 4.9

686:
உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே 4.10

687:
மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே (2) 4.11

 

Leave a Reply