மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

அம்பிகை ஆலயம்

 

இத்திருக்கோயிலைச் சுற்றியே நகரின் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. தாமரைப் பூவின் இதழ்கள் எப்படி மைய மகரந்தத்தை சுற்றி விரிந்திருக்கின்றனவோ, அதுபோலவே சித்திரை வீதிகள், ஆடி வீதிகள், ஆவணிமூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் என மதுரை நகரின் வீதிகள் அனைத்தும் அழகுற அமைந்திருப்பதைக் காணலாம். வீதிகள் அனைத்தும் தமிழ் மாதங்களின் பெயரால் அழைக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.

திருக்கோயிலில் அருள்மிகு சுந்தரேசுவரரும், அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சியும் எழுந்தருளியுள்ளனர். சுந்தரேசுவரருக்கு மட்டும் 5 கோபுரங்களும், அம்மனுக்கு 3 கோபுரங்களும் உள்ளன. சித்திரை வீதிகளில் ஒவ்வொன்றிலும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன. கோயிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. மாலிக்கபூர் படையெடுப்புக்கு முன்னதாக இங்கு 28 கோபுரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தெற்கு கோபுரத்தில் நிறைய விக்ரகங்கள் காணப்படுகின்றன. மேற்கு, கிழக்குக் கோபுரங்கள் சுதை வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. வடக்குக் கோபுரம் சுதை வேலைப்பாடுகள் இன்றி உள்ளது. இதனால் இதை மொட்டை கோபுரம் எனவும் அழைக்கின்றனர். சித்திரை வீதிகளில் தற்போது டைல்ஸ் பதிக்கப்பட்டு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் சுற்றிவர வசதியாக பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன.

வடக்குக் கோபுர வாசலில் முனீஸ்வரர் சன்னதியும் உள்ளது. கிழக்கு கோபுரம் அருகே மதுரை வீரன் சன்னதி உள்ளது. இடையில் காந்தி மண்டபம் உள்ளது. தெற்குக் கோபுரம் வழியாக நுழைந்தால், எதிரே தெரியும் முக்குருணி விநாயகரை தரிசித்தபடியே அம்மன் சன்னதிக்குச் செல்லலாம். அம்மன் சன்னதி எதிர்புறம் பொற்றாமரைக்குளம் உள்ளது. தெற்கு கோபுரம் வழியாக அம்மன் சன்னதி செல்லும் வழியில் விபூதி பிள்ளையார் சிலை உள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மன் சன்னதி எனப்படும் கிழக்கு புற வாயில் வழியாகவே அஷ்டசக்தி மண்டபம் வழியே வந்து உள்ளே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொற்றாமரைக்குளத்தைச் சுற்றி வந்து பின்னர் அம்மன் சன்னதிக்குள் செல்வதையும் பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர்.

மீனாட்சியம்மன் சன்னதி இரு பிராகாரங்களுடனும், இரு கோபுரங்களுடனும் அமைந்துள்ளது. அம்மன் கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். அவருக்கு நேராக வெளிப்பிரகாரத்தில் கோபுரம் இல்லாத வாயில் உள்ளது.

அம்மன் சன்னதியில் வழிபட்டபிறகு சுவாமி சன்னதிக்கு செல்லும் போது சுவாமி சன்னதி வெளிப்பிராகாரத்தின் வலது பகுதியில் செல்லலாம். அப்போது சுவாமி சன்னதி வலது வெளிப்பிரகாரக் கூரையில் சுழலும் லிங்க ஓவியம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். அடுத்ததாக முக்குருணி விநாயகர் சன்னதி பிரமாண்டமாக உள்ளது. திருமலை நாயக்கர் காலத்தில் தெப்பக்குளம் தோண்டப்பட்டபோது இந்த விநாயகர் சிலை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக சுவாமி சன்னதிக்குள் கம்பத்தடி மண்டபம் (சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரம் முன்புள்ள வழியாக) செல்லலாம். சுந்தரேசுவரர் சன்னதி 3 பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. சன்னதியிலிருந்து கிழக்குக் கோபுரம் வரையில் 5 கோபுரங்கள் அமைந்துள்ளன. சுவாமி சன்னதியில் இடது புறம் வெள்ளி அம்பலத்தில் நடராஜர் கால்மாறி ஆடும் சிலை உள்ளது. நடராஜர் கோயிலை தமிழகத்தில் சபை என அழைக்கிறார்கள். அதன்படி இந்த வெள்ளி அம்பலம் ரஜதசபை (வெள்ளி) எனப்படுகிறது.

சுவாமி சன்னதி அடுத்த உள்பிரகாரத்தில் 63 நாயன்மார், சப்தமாதர்களும், வலதுபுறம் சரஸ்வதி, அடுத்து தென்மேற்கு மூலையில் தட்சிணாமூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சுவாமி சன்னதி பின்புறம் பிச்சாடணர் உள்ளார். பின்னர் சன்னதிக்கு மேற்கு மூலையில் சித்தர், துர்க்கையும், வடகிழக்கு மூலையில் மகாலெட்சுமியும், அடுத்து பைரவரும் இடம் பெற்றுள்ளனர்.

சுவாமி சன்னதி முன் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் கோயில் கொடிமரம், அதைச் சுற்றிலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட பழமைச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. ஆகவே அந்த பகுதி சிற்பக் கருவூலமாக திகழ்கிறது. கொடி மரத்துக்கு முன் வீரபத்ரகாளி, வீரபத்திரர் ஆகிய விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன. சன்னதிக்கு இடதுபுறம் நவக்கிரகங்கள், தியான மண்டபம் ஆகிவை இடம் பெற்றுள்ளன.

சுவாமி சன்னதி, கம்பத்தடி மண்டபம் ஆகியவற்றுக்கு முன்னதாக கிழக்கு கோபுரம் செல்லும் வழியில் நந்தியும், அதையொட்டி ஈசான மூலையில் ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன.

கிழக்காடி-வடக்காடி வீதி சந்திப்பில் மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு நடைபெறும் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. வலதுபுறம் வன்னிமரத்தடி விநாயகர் சன்னதியும் அதன் முன் யானை, ஒட்டகம் பாரமரிக்கும் இடமும் உள்ளன.

மேல ஆடி வீதியில் பசு காப்பகம் உள்ளது. வடக்காடி வீதியில் திருவள்ளுவர் கழகம் உள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மனித மூளையின் வடிவமாகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்திருக்கோயிலுக்கு உரிய துணைக் கோயில்கள் 22 உள்ளன. இதில் பழையான முக்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்டவையும் அடங்கும்.

Leave a Reply