கர வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

விழாக்கள் விசேஷங்கள்

கர – தமிழ் புத்தாண்டு பலன்கள

99" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2010/12/gurupeyarchi_1_mesham.jpg" alt="" align="left" width="88" height="87" />மேஷம்

இந்த “கர’ வருடத்தில் உங்கள் ஜன்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்களின் தேகத்தை பொலிவடையச் செய்வார். மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும்.

இந்த ஆண்டு முழுவதும் கேது பகவான் உங்களின் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். தற்பெருமை பேசுபவர்கள்கூட உங்களின் பெருந்தன்மையை உணர்ந்து, பணிந்து போவார்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள்.

இந்தக் காலகட்டத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், புதியவர்களின் நட்பை ஏற்படுத்திக் கொடுப்பார். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும்.

இந்த ஆண்டு ஐப்பசி 28ஆம் தேதி வரை சனி பகவான் உங்களின் ருண ரோக சத்ருஸ்தானத்தில் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும்.

ஐப்பசி 29ஆம் தேதியிலிருந்து “கர’ வருட இறுதி வரையில், குரு பகவானின் பார்வையில் – உங்களின் களத்ர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்யம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு இந்த “கர’ ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.

விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்வீர்கள். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய வேண்டியிருக்கும். சக விவசாயிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மற்றபடி உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் உங்களுக்குப் புதிய பதவிகளை அளிக்கும். இதனால் பொறுப்புகள் கூடும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் ஆண்டாக இது அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை.

மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.

பரிகாரம் : திருவேங்கடமுடையானையும், தாயாரையும் வழிபட்டு வரவும். தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச் செய்துள்ள “திருமாலை’ பாசுரங்களை இயன்ற அளவு ஓதவும். இதனால் நன்மைகள் அதிகரிக்கும்.

இயன்றவர்கள், “திருக்கோவிலூர்’ சென்று ஸ்ரீதிரிவிக்ரம பெருமாளை ஒரு முறை தரிசித்துவிட்டு வரவும்.

Leave a Reply