மகாளய பட்சம் எனும் மகத்தான நாட்கள்! என்ன செய்ய வேண்டும்?!

விழாக்கள் விசேஷங்கள் ஸ்தோத்திரங்கள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

tharpanam in thiruvedagam vaigai river

நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, ஸ்வர்ணமயமான விமானங்களில், சூர்ய கதிர்களின் வழியாக பூவுலகிற்கு எழுந்தருளி, மஹாளய பட்சம் எனும் அந்த பதினைந்து புனித தினங்களிலும் நம்முடன் தங்கியிருக்கிறார்கள் என்று வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.

கிடைத்தற்கரிய புண்ணிய பலனை நமக்கு அளித்தருளும் அந்தப் பதினைந்து நாட்களும் – நாம் தூய்மையான உள்ளத்துடன் இருக்க வேண்டும். வீட்டை தூய்மைப்படுத்தி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பதினைந்து நாட்களிலும், வீட்டில் எவருடனும் சண்டையிடுவதோ, அல்லது தவறான வார்த்தைகள் பேசுவதோ அல்லது அசைவ உணவு உண்பதோ கண்டிப்பாகக் கூடாது. ஏனெனில், அப்போது நம் முன்னோர்கள் நம் வீடுகளில் தங்கியிருக்கிறார்கள்.

அவர்களது தேஜஸ்ஸை (தெய்வீக ஒளி) நம் ஊனக்கண்களில் பார்த்தால், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நம் பார்வை போய் விடும். ஆதலால்தான் அப்பெரியோர்கள் தங்கள் ஒளியை மறைத்துக் கொள்கிறார்கள்.

சக்தி உள்ளவர்கள் தினமும் சிராத்தம் செய்யலாம். இதற்கு வசதியில்லாத அன்பர்கள் அவரவர்கள் தங்கள் தந்தை இறைவனடி சேர்ந்த திதியன்று செய்யலாம். தந்தை காலமான தினத்தின் திதி தெரியாதவர்கள் ஏகாதசி அல்லது மஹாபரணி ஆகிய தினங்களில் செய்யலாம். புண்ணிய நதிக்கரையில் செய்வது மிகச் சிறந்த நற்பலனை அளிக்கும்.

பக்ஷம் என்றால் 16 நாட்கள்; மஹாளயம் என்பது பித்ரு தேவதைகள் வசிக்கும் இடம். பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் சூக்ஷ்ம ரூபத்தில் வசிக்கும் 16 நாட்களே மஹாளய பக்ஷம். புரட்டாசி மாச அமாவாசைக்கு முந்தைய 16 நாட்களை மாஹாளய பக்ஷம் என்று பெயர். புரட்டாசி அமாவாசையை மஹாளய அமாவாசை என்று சொல்கிறோம்.

இந்த நாட்களில் நமது மூதாதையர்களான பித்ருக்கள் பூலோகத்திற்கு சூக்ஷம ரூபத்தில் வந்து நாம் அளிக்கும் பித்ருதர்பணங்களை நேரடியாக எற்பகிறார்கள். பொதுவாக பித்ருக்கள் எல்லா நாட்களிலும் பூலோகம் வர இயலாதாம். ஒவ்வொரு அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் அவர்கள் மறைந்த திதி நாட்கள் மற்றும் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே அவர்களால் பூலோகத்திற்கு வர இயலுமாம். அதனால்தான் அவர்கள் வரும் தினங்களில் பித்ரு பூஜையை செய்யச் சொல்லியிருக்கிறார்கள் மஹரிஷிகள்.

புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள், தேவர்கள்மற்ஸ எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. நமது பித்ருக்களான வசு, ருத்ர, ஆதித்யர்கள் கூட பூலோகம் வந்து பித்ரு தர்பணங்களை சூக்ஷ்ம ரூபமாய் செய்கிறார்கள் என்பர்.

அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் க்ரஹண காலங்களில் செய்யும் தர்பணமானது நமது தந்தை மற்றும் முந்தைய 2 தலைமுறையினருக்கும், தாய் வழியில் 3 தலைமுறையினருக்குமாக 12 பேர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.ஆனால் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே, காருணீகர்கள் எனப்படும் மாமா-மாமி, பெரியப்பா-பெரியம்மா, அத்தைகள், சகோதரர்கள்- அவர்களது மனைவிகள், சித்தப்பா-சித்தி, மாமனார்-மாமியார், குரு, நண்பர்கள் ஆகிய எல்லோருக்கும் செய்ய முடிகிறது.பித்ருக்களுக்கு உணவாவது எள் கலந்த நீரே. இதனை மந்த்ர பூர்வமாக அவரவர் பெயர் சொல்லி அளிப்பதன் மூலம் அவர்களது ப்ரீதிக்குப் பாத்திரமாகிறோம்.

இறந்தவர்கள் எங்கோ மறுபடி பிறந்திருப்பார்களே பின் எதற்கு இவை என்று ஒரு கேள்வி வரும்.அவ்வாறு பிறந்தாலும், மீண்டும் பிறந்த அந்த ஜீவனுக்கு அந்த நேரத்தில் வேண்டிய பொருளாக நாம் அளிக்கும் எள்ளும்-நீரும் மாறிவிடும் என்கிறார்கள். இன்னொரு கருத்துப்படி, நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்/தர்பணம்போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும், செய்யத் தகுதியுடையவன் செய்யாது விடக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று.
மஹாளயத்தை மூன்று விதங்களில் செய்யலாம்.

பார்ணவம் எனப்படும் ஹோமத்துடனான சிராத்தமாகவும், ஹோமமில்லாது ஹிரண்ய சிராத்தமாகவோ, அல்லது தர்பண ரூபமாகவோ செய்வது வழக்கம். நமது பொருளாதார, இட-கால வசதிக்கு ஏற்ப ஏதேனும்ஒரு வழியைப் பின்பற்றியோ அல்லது குலவழக்கத்தின்படியோ செய்வது அவசியம். 16 தினங்களும் தர்பணம் செய்வதற்கு பக்ஷ-மாளயம் என்று பெயர்.

இதனைச் செய்ய இயலாதவர்கள் விசேஷ தினங்களான மஹாபரணி, மத்யாஷ்டமி, வ்யதிபாதம், கஜச்சாயா,அல்லது தமது தாய்/தந்தையின் திதிகளில் மட்டுமாவது ஹிரண்ய ரூபமாக சிராத்தம் செய்து அன்னமிடுதல் வேண்டும். குடும்பத்தில் யாரேனும் சன்யாசியாகி மரணமடைந்திருந்தால் அவர்களுக்கு மாஹாளய ஏகாதசியன்று சிராத்தம் செய்வதும் துர்மரணமடைந்தவர்களுக்கு சதுர்தசி உத்தமமானதாகச் சொல்லப்படுகிறது.

பொதுவாக நாம் தர்பணங்கள் செய்யும் போது நமது வலதுகை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் நடுவிலாக நீரை வார்க்கிறோம். இந்த இருவிரல்களுக்கு நடுவில் இருக்கும் ரேகைகளை பித்ரு-பூம்ய ரேகைகள் என்பர். இந்த ரேகைகள் மூலமாக அளிக்கப்படும் நீரானது பித்ருக்களுக்கானதாக மாறிவிடுகிறதாம்.

இந்த 16 நாட்களும் சிராத்தம், தர்பணம் போன்றவை மூலமாக தான தர்மங்களைச் செய்தல் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானதாச் சொல்லப்படுகிறது. இவ்வாறு ப்ரீதியான பித்ருக்கள் நமது வம்சம் தழைக்கவும், நோய்-நொடியற்ற வாழ்வுக்கும் ஆசிர்வாதிக்கின்றனர்.

நமது வாழ்வுக்கு நல்லது என்பது ஒருபுறமிருந்தாலும், நம்மை வளர்த்து ஆளாக்கிய நமது பெரியவர்களுக்கு நாம் செய்யும் நன்றி அறிவித்தல் என்ற எண்ணத்திலாவது இந்த பித்ரு பூஜையை விடாது செய்ய வேண்டும். அவரவர் குலாசாரத்தின்படியாக எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படியாக செய்து மூதாதயர்களை வணங்கி, அவர்களது அருளை நாடுவோம்.


மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் (சில நேரம் 16ஆக மாறுபடும்) நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளய பட்சம் ஆகும். இது புரட்டாசி மாதத்து பௌர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை நீடிக்கும்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை, இவற்றை விட உயர்ந்தது மகாளய அமாவாசை. மறந்து போனவனுக்கு மகாளயபட்சம் என்பார்கள் பெரியவர்கள். அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடமாக ஸ்ரார்த்தம் (திதி) கொடுக்காமல் மறந்து இருந்தால் கொடுக்க மறந்தவர்கள் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட ஸ்ரார்த்தம் (திதி) கொடுத்த பலன் வந்து சேருமாம்!

மகாளயபட்ச காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும்: மற்ற மாதங்களில் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் மறைந்த திதியன்று ஸ்ரார்த்தம் (திவசம்) செய்வோம். ஆனால் மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த முன்னோர்களையும் அப்போது நினைவுகூர வேண்டும்.

புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து வர வேண்டும். அந்தணர்களுக்கு வஸ்திரதானம், ஏழைகளுக்கு அன்னதானம், பொருளாதார நிலையில் படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு வித்யாதானம், இவற்றை அவரவர் சக்திக்கு தகுந்தவாறு அளிக்க வேண்டும்!

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறை கூட தெரிந்து வைத்திருக்கும் பலர் தங்களின் மூதாதையர்கள் (முன்னோர்கள்) மூன்று தலைமுறைகளுக்கு முன்பு உள்ளவர்கள் (பித்ருக்கள்) பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்தப் பயிற்சியை இந்தக் காலத்தில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர்களின் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்தால்தான் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கு தர்ப்பணம், ச்ராத்தம் குறித்த பிரக்ஞை நீடித்து நிலைத்திருக்கும்.

தலைமுறைக்கே லாபம்:

மகாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்..!

முதல் நாள் : பிரதமை திதி – பணம் சேரும்
இரண்டாம் நாள் : துவிதியை திதி – ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
மூன்றாம் நாள் : திரிதியை திதி – நினைத்தது நிறைவேறும்
நான்காம் நாள் : சதுர்த்தி திதி – பகை விலகும்
ஐந்தாம் நாள் : பஞ்சமி திதி – வீடு நிலம் சொத்து வாங்கும் யோகம்
ஆறாம் நாள் : ஷஷ்டி திதி – புகழ் கிடைக்கும்
ஏழாம் நாள் : ஸப்தமி திதி – சிறந்த பதவி கிடைக்கும்
எட்டாம் நாள் : அஷ்டமி திதி – அறிவு ஞானம் கிடைக்கும்
ஒன்பதாம் நாள் : நவமி திதி – சிறந்த வாழ்க்கை துணை கிடைக்கும்
பத்தாம் நாள் : தசமி திதி – நீண்டநாள் ஆசை நிறைவேறும்
பதினோராம் நாள் : ஏகாதசி திதி – படிப்பு கலை வளரும்
பனிரென்டாம் நாள் : துவாதசி திதி – தங்க ஆபரணங்கள் சேரும்
பதிமூன்றாம் நாள் : திரயோதசி திதி – தீர்க்காயுள் ஆரோக்யம் தொழில் அபிவிருத்தி கிடைத்தல்
பதினான்காம் நாள் : சதுர்த்தசி திதி – பாவம் நீங்கி எதிர்கால தலைமுறைக்கு நன்மை
பதினைந்தாம் நாள் : மகாளய அமாவாசை – மேலே சொன்ன அத்தனை பலன்களும் நம்மை வந்து சேர நம் முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள்!

மகாளயபட்ச விதிமுறைகள் : மகாளயபட்ச (மேலே சொன்ன 15 தினங்கள்) காலத்தில் கண்டிப்பாக வெங்காயம் பூண்டு உள்ளிட்டவை உணவில் சேர்க்கக் கூடாது. எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது! முகச்சவரம் செய்யக்கூடாது! தாம்பத்யம் (உடலுறவு) கூடாது! புலனடக்கம் மிக மிக அவசியம்!

மகாளயபட்சத்து (பதினைந்து நாட்களில்) தினங்களில் கண்டிப்பாக வெளியே சாப்பிடக் கூடாது (பரான்னம் புசிக்கக் கூடாது).

இந்த வருட மஹாளய பக்ஷ விவரம்

செப்.18 பு – ப்ரதமை
செப்.19 வி – த்விதீயை
செப்.20 வெ – த்ருதீயை
செப்.21 ச – சதுர்த்தி (மஹாபரணீ)
செப்.22 ஞா – பஞ்சமி
செப்.23 தி – சஷ்டி (கபில சஷ்டி)
செப்.24 செ – ஸப்தமி (மஹாவ்யதீபாதம்)
செப்.25 பு – அஷ்டமி (அபிதவா நவமி, புதாஷ்டமி, மத்யாஷ்டமி)
செப்.26 வி – நவமி
செப்.27 வெ – தசமி
செப்.28 ச – ஏகாதசி
செப்.29 ஞா – துவாதசி (சந்யஸ்த மஹாளயம்)
செப்.30 தி – திரயோதசி (கஜச்சாயை)
அக்.01 செ – சதுர்தசி (சஸ்த்ர ஹத மஹாளயம்)
அக்.02 பு – மஹாளய அமாவாஸை, பிண்டபித்ரு

மஹாளய பக்ஷ தர்ப்பணம்

தர்ப்பணம் என்றால் போனவர்களுக்கு திருப்தியையும் நிறைவையும் தருவதாகும். அவர்களை திருப்திப்படுத்தி மேலும் நகர்த்தச் செல்ல சிரார்த்தம் இது செய்யப்படுகிறது.

மூதாதையரின் இறப்பு நேரம், தேதி மற்றும் இயல்பைப் பொருட்படுத்தாமல் ஒருவர் தனது மூதாதையருக்கு கடமையை நிறைவேற்றும் நாள் இது. இது ஒரு வகை பார்வண சிரார்த்தம். இந்த நாளில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யப்படுகிறது.

செயல்முறைகள்

ஸ்ரார்த்தம் நான்கு படிகளில் செய்யப்படுகிறது:

1. விஸ்வதேவ ஸ்தபனா – இது ஒரு தொழில்முறை பூசாரியைக் கலந்தாலோசிப்பது மற்றும் சடங்கைச் செய்வதற்குத் தேவையான மற்ற அனைத்து பொருட்களையும் சேகரிக்கும் செயல்முறையைக் குறிப்பிடுகிறது.

2. பிண்டம் – அரிசி, பார்லி, பசும்பால், தேன், நெய் மற்றும் சர்க்கரையால் ஆன ஆத்மாக்களுக்கு ஒரு வட்ட வடிவ பந்தில் உணவு வழங்கப்படுகிறது.

3. தர்ப்பன் – எள், பார்லி, தர்பை புல் மற்றும் வெள்ளை மாவு ஆகியவற்றுடன் தர்பனம் தண்ணீரை வழங்கி வருகிறது.

4. பிராமணர்களுக்கு உணவளித்தல் – இறுதியாக, பிராமணர்களுக்கு நன்றி உணவாக உணவு வழங்கப்படுகிறது.

சிரார்த்தத்தில் என்ன தானம் செய்ய வேண்டும்?

சிரார்த்தம் பூஜையில் சுப பொருட்களை தானம் செய்வது பித்ரு தோஷத்திலிருந்து விடுபட உதவுகிறது. புராண நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களின்படி ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உள்ளது.

வெல்லம் – இது வறுமையை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கிறது.

நிலம் – ஒரு முனிவருக்கு நிலத்தை வழங்குவது உங்களுக்கு நிதி ரீதியாக வளர உதவுகிறது.
தங்கம் – இது வீட்டில் உள்ள ஒற்றுமையை குறைக்கிறது மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே அமைதியான உறவை ஏற்படுத்த உதவுகிறது.

மாடு – மற்றவர்களுக்குப் பரிசாகப் பசுவை கொடுப்பது, பெயர், புகழ் மற்றும் அனைத்து வார்த்தைகளான இன்பங்களையும் கொடுத்து உங்களுக்கு உதவுகிறது, ஏனெனில் இது யாராலும் செய்யப்படக்கூடிய தூய்மையான தானம்.

உணவு தானியங்கள் – இது செழிப்பை அளிக்கிறது.
நெய் – முனிவருக்கு நெய்யை வழங்குவது வாழ்க்கையின் அனைத்து கண்ணோட்டங்களிலும் வளர உதவுகிறது.

உப்பு – உப்பு நம் முன்னோர்களின் ஆத்மாவை சமாதானப்படுத்துகிறது, இதனால் அவர்கள் நமக்கு வரங்களை அளிக்கிறார்கள்.

ஆடைகள் – எப்போதும் செழிப்பு மற்றும் மன அமைதியுடன் ஆசீர்வதிக்கும் முனிவர்களுக்கு ஒரு ஜோடி ஆடைகள் பரிசாக வழங்கப்படுகின்றன.
வெள்ளி – வெள்ளியை வழங்குவது நம் முன்னோர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்தி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
எள் விதைகள் – எள் விதைகளை வழங்குவது எந்தவிதமான ஆபத்துகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

மஹாளயபக்ஷம் தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது ,
2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது,
3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது.

இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள்

1.தேவகடன்,
2.பித்ருகடன்,
3.ரிஷிகடன்

ஒவ்வொரு மனிதனும், தேவகடன் நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.
பித்ருகடன்,தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனிலிருந்தும்நிவர்த்தி அடையலாம்.

ரிஷிகடன் முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலமும், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின் மூலமும், ரிஷிகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.

கிடைத்தற்கரியது மஹாளயபக்ஷம் புண்ணிய காலம்.

முதன் முதலில் பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதிமூலச் சூரிய கிரகமும், ஆதிமூலச் சந்திர கிரகமும் இணைகின்ற கிரகமண்டல சங்கமத்தில் தோன்றுவதே மஹாளயபக்ஷபூஷித லோகமாகும். இங்குதான் மஹாளயபக்ஷத்தை பெருந் திருவிழாவாக தேவர்களும் பித்ருக்களும் கொண்டாடுகிறார்கள். அதாவது, நமது மூதாதை யர்களது பித்ரு லோகங்களில் கொண்டாடப் படுகின்ற பிரம்மோற்சவமே மஹாளயபக்ஷம் மாகும்.

பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்.

நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத் திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற் றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக் கின்றனர்.

பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும் ஸ்ரீ அக்னி பகவானின் பத்தினியான ஸ்வதா தேவியானவள், நாம் இடுகின்ற எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக்கு எடுத்துச் செல்கிறாள். ஆனால், மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய- சந்திர உலகிற்கு வந்துபோவதால் ஸ்வதா தேவியால் அனைத்து உறவினர்களையும் அங்கு சந்திக்க முடிகிறது. எனவே மஹாளய பட்ச அமாவாசையில் நாம் சமர்ப்பிக்கும் எள், நீர் ஆகியவற்றை இறந்த நமது உறவினர்களி டையே உடனடியாக அவள் சேர்த்துவிடுகி றாள்.
இறந்துபோன மூதாதையர்களின் நினைவாக நாம் அளிக்கும் உணவானது, (இந்த மஹாளயபக்ஷம் காலத்தில்) உடனே அவர்களைச் சென்று அடைவதாய் ஐதீகம்.

என் அருமையான தகப்பன் கடினமாக உழைத்து, சிக்கனமாக வாழ்ந்து, என்னைப் படிக்க வைத்து, நல்ல வேலையில் கொண்டுபோய் சேர்த்து, நான் உயர்வதைப் பார்த்து மகிழ்ந்து, எனக்குத் திருமணம் செய்து வைத்து, பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்துவிட்டு, என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதித்துவிட்டுப் போனாரே… அதற்காக நன்றி என்று தெரிவிப்பது நல்லதல்லவா?
அந்தத் தாய் இல்லையெனில் நான் இல்லை. தன் உதரத்தில் சுமந்தவள் என்பதால் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் என் நினைவாகவே வாழ்ந்து, எனக்காகவே தன் வாழ்க்கை வசதிகளை சுருக்கிக்கொண்டு, என்னுடைய வளர்ச்சியையும் கம்பீரத்தையும் பார்த்துப் பூரித்து ‘அது என் பிள்ளை’ என்று பலபேர் முன்னால் கர்வமாகச் சொல்லி, அந்தக் கர்வத்தின் காரணமாகவே இன்னும் அதிக உதவிகள் செய்து, உங்கள் மனைவிக்கு வாழ்வின் மேன்மைகளை உணர்த்தி, உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்கள் சொல்லி, சட்டென்று ஒருநாள் போய் வருகிறேன் என்று சொன்னதுபோல மறைந்து போனாளே… அவளுக்கு மனமார்ந்த நன்றியாக தர்பனம் செய்வதுதான் எத்தனை சுகம்! நெஞ்சார்ந்த நன்றி என்று தாய் தந்தையாரை நினைத்துக் கொண்டுவிட்டால் அந்த நீத்தார் கடனில் எவ்வளவு ஆழமாக, உணர்வுப்பூர்வமாக ஈடுபட முடியும்!

‘அன்பு தாயே, தந்தையே, நீங்கள் வெளிச்சத்திற்கு வாருங்கள் உங்கள் பசி தீர்க்க இந்த அரிசி மாவினால் செய்த பிண்டத்தை சமர்ப்பிக்கிறேன். உங்கள் தாகம் தீர்க்க எள் நீர் வார்க்கிறேன். உங்களை கைகூப்பி இந்த இடத்தில் இந்த இந்த மஹாளயபக்ஷத்தில், என் அருகே வந்து நான் கொடுக்கின்ற இந்த சிறிய பொருட்களை காணிக்கையாக ஏற்று சந்தோஷமடைய வேண்டும். எங்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேண் இங்கே உட்கார்ந்து இத்தனை கம்பீரமாக இதைச் செய்ய முடிகிறதென்றால் அது நீங்கள் என்னை நன்கு வளர்த்ததுதான் காரணம்’ என்று நெகிழ்ந்து சொல்லுங்கள்.

அரிசி மாவினால் செய்த பிண்டத்தை காக்கை தின்று விட்டது. ஐயர் தட்சணையை வாங்கிக்கொண்டு போய்விட்டார். நீரில் இறைத்த ஜலம், நீரோடு கலந்துவிட்டது. நீங்கள் மட்டும் குளக்கரையில் அமர்ந்து நீரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மனம் மட்டும் அந்த மஹாளயபக்ஷத்தில், அம்மாவையும், அப்பாவையும், மற்ற முன்னோர்களையும் நினைத்துக் கொள்ளும். உள்ளுக்குள் கை கூப்பும். கண்களின் ஓரம் நீர் திரளும்.

பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்.

எவ்விதம் பித்ருக்கள் வருகிறார்கள்?

மஹாளயபக்ஷம் ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் ஆகியோரின் அனுமதி பெற்று பித்ருக்கள், ஸ்வர்ண (தங்கம்) மயமான விமானங்களில் ஏறி நம்மிடம் வருகிறார்கள். இந்த விமானங்கள் சூரியனின் ஒளிக்கற்றைகள் மூலம் பறந்து வருகின்றன. இவ்விதம் பித்ருக்கள் பூமியில் இறங்கும்போது அவர்களை தேவர்களின் உலகிலுள்ள மகரிஷிகள் ஆசீர்வதிக்கின்றனர்.

தேவர்கள் வணங்குகின்றனர். பித்ருக்கள் பரம பவித்திரமானவர்கள். தங்களது ஜீவித காலத்தில் செய்துள்ள புண்ணிய செயல்களால் புடமிட்ட தங்கம்போல் ஒளிபொருந்தியவர்களாகப் பித்ருக்கள் பிரகாசிக்கிறார்கள் எனப் புராதன நூல்கள் போற்றிப் புகழ்கின்றன.

மீண்டும், தங்கள் குழந்தைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதால், அவர்கள் பேருவகை அடைவதாக ‘கருடபுராணம்’ கூறுகிறது. அவர்கள் நம்மிடையே வந்து நம்முடன் தங்கும் இந்தப் பதினைந்து புனிதநாட்களும் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேசவேண்டும், வீட்டை எப்படிப் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ‘வைத்யநாத தீக்ஷிதம்’ என்ற வடமொழி நூல் அதிஅற்புதமாக நமது நன்மைக்காக விளக்கியுள்ளது.

இந்த, பதினைந்து நாட்களிலும், ஒவ்வொருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், பாலியலைத் தூண்டும் புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

பித்ருக்களை வழியனுப்பி வைத்தல்!

இவ்விதம் மஹாளயபக்ஷம் பதினைந்து நாட்களும் பூஜித்த பிறகு, மஹாளய அமாவாசை அன்று விசேஷ பூஜை செய்து நம்மை ஒரு பொருட்டாகக் கருதி இப்பூவுலகிற்கு எழுந்தருளி நம்முடன் இந்தப் பதினைந்து நாட்களும் தங்கி, நமக்கு அருள்புரிந்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களுக்குப் பாதபூஜை செய்து (பெரியவர் ஒருவர் மூலம்), நன்றி கூறி அம்மகாபுருஷர்களையும், அவர்களது தேவியரையும் (மனைவி) வழியனுப்பி வைக்கிறோம். அவர்களும் தாங்கள் வந்த தங்கமயமான விமானத்திலேயே சூரியனின் கிரணங்கள் வழியாக தங்களது நல்லுலகிற்குச் செல்கிறார்கள். ஆதலால், மஹாளயபக்ஷம்என்ற மகத்தான புண்ணிய காலம் நமக்கு அளவற்ற நற்பலன்களைத் தேடித் தருகிறது.

தர்ப்பணம்

உடல் நிலை சரியில்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்திலும் அளிக்கலாம். ஆனால் தீர்த்தத் தலங்களுக்கு சென்று தர்ப்பணத்தை எள், நீர் தெளித்துச் செய்தால் பலன் பல மடங்கு கூடும் என்பது ஐதீகம். தர்ப்பணங்களில் எள் பித்ருக்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. இந்தத் தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும் என்பது சாஸ்திரம். இதனால் வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது ஐதீகம்.

செய்ய வேண்டியவை

இல்லத்தில் உள்ள பெரியவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பசியால் வாடிவிடாமல் காக்க வேண்டும். இருக்கும்போதும், இறந்த பின்னும் முன்னோரைக் காப்போம், வழிபடுவோம். தர்ப்பணத்திற்குப் பின்னரே இல்லத்துப் பூஜைகள் செய்ய வேண்டும்.தர்ப்பணம் செய்ய வேண்டிய இம்மாதத்தில் திவச நாள் முடிந்த பின்னரே இல்லத்து மங்கள நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும்.ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் பித்ருக்களை வணங்கிச் சூரியனை வழிபடலாம்.ஆண்டொன்றுக்குத் தொண்ணூற்றாறு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்ற கணக்கொன்று உண்டு.மகா புண்ணியத்தை அளிக்கக்கூடியது தாய், தந்தையருக்கு இடைவிடாமல் செய்யும் திவசமே.

தவிர்க்க வேண்டியவை

கர்த்தா என்ற தர்ப்பணம் செய்பவர் தனது பெயரை இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு எந்தப் பூஜையிலும் சங்கல்பம் செய்துகொள்ளக் கூடாது.

ஆக, அதியற்புதமான- தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து, பல்லாயிரக்கணக்கான கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மஹாளய பட்ச தர்ப்பண தான- தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காணலாம்..!

வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம்.
திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும்.

“”மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது” என்பது பழமொழி.

இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் – குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான்.
இந்துக்களுக்கு தமது முன்னோரது ஆசி பெற அமாவாசைகள் அதிலும் குறிப்பிட்ட சில அமாவாசைகள், வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் மிகவும் உகந்தவை.

பிதுர்தர்ப்பணத்தை பிள்ளைகள் அவசியம் பெற்றோருக்காகச் செய்யவேண்டும். தர்ப்பணம் என்றால் திருப்தியுடன் செய்வது என்றும், சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என்று அர்த்தம்.
மஹாளயபக்ஷ அமாவாசையில், சீக்கிரம் எழுந்து புனித நதிகளில், கடலில் அல்லது அருகிலுள்ள ஏரி குளம் இவற்றில் நீராடுவார்கள். இந்த நாளில் உண்ணாவிரதம் இருந்து அமாவாசை நோன்பையும்
கடைப்பிடிக்கின்றனர்.

ஸ்ரார்த சடங்குகளை செய்வது, எள் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புனிதமான செயல் என்று நம்பப்படுகிறது.

பிந்திய மாத காலத்தில் தங்கள் முன்னோர்களை வணங்க முடியாதவர்கள் இந்த நாளில் இருந்தாவது, இவற்றினை செய்தால் நலம் ஆகும். அன்று அந்தணர்கள், முதியவர்கள், ஏழைகள் என்பவருக்கு தானம் தர்மம் செய்வது பல தலைமுறைக்கும் பயன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
தடைபட்ட திருமணம், வேலையின்மை, நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் வாழ்வில் கிடைக்கப்பெறும்.

அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.

ஆகவே, அவர்களுக்குரிய திதி, தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முறையாக செய்வது ஒன்றே அவர்களுக்கு நிச்சயமாக விடுதலை அளிக்கும். அதனால் இந்த அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து, திதி,திவசம் செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று இன்பமாக வாழவேண்டும்.

பிதுர் தோஷம் நீக்கும் மஹாளயபக்ஷ அமாவாசை பிதுர்களாகிய மறைந்த நம் முன்னோர்கள் பூஜைக்கு ஏற்றதாக போற்றப்படுகின்றது. அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும். இடையூறு இல்லாமல் சுகமாக வாழலாம் என்பது நம்பிக்கை.

இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

(ஆதாரம் : ஸ்ரீ பூர்வபுண்ணிய நிர்ணயசாரம், ஸ்ரீ கருடபுராணம், ஸ்ரீ பவிஷ்ய புராணம், ஸ்ரீ மத் மகாபாரதம், ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீ அகத்தியர் பூஜா விதானம், முதலிய நூல்கள்).

  • ராஜசேகர வாத்யார், நெல்லை

author avatar
Dhinasari Tamil News Web Portal Admin

Leave a Reply