ஸ்ரீ ருத்ர விளக்கம் மூலம் கிடைத்தது பொக்கிஷம்

விழாக்கள் விசேஷங்கள்

அ.ச.ஞா px;" />தாம் சிரிக்காமல் பிறரைச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை சிவராமனிடம் நிரம்ப உண்டு. கம்பன் விழா நடைபெறும்பொழுது ஏதோ ஒரு நாளில் திருப்பெருந்துறை சென்று வழிபட்டு வரவேண்டும் என்று சிவராமன் நினைத்தார். முன்னர்ப் போய்வந்தவன் ஆதலால் எனக்கு ஓரளவு வழி தெரியும். ஒரு ரெயில்வே கேட்டிலிருந்து ஏழு மைல் சென்றால் “திருப்பெருந்துறை அடையலாம்’ என்று நான் கூறினேன். பக்கத்தில் கணேசன் இருந்தார். “சிவராம்ஜி இவன் கிடக்கிறான். இவனுக்கு என்ன தெரியும்? நான் சொல்கிறேன். அந்த ரெயில்வே கேட்டிலிருந்து ஒரு மைல் போனவுடன் திருப்பெருந்துறையைக் காணலாம்’ என்றார். நாங்கள் புறப்பட்டோம்.

ரெயில்வே கேட் வந்தது. “அடே குப்புசாமி! சரியாக ஒரு மைல் போனவுடன் வண்டியை நிறுத்து’ என்றார் ஏ.என்.எஸ். ஒரு மைல் போனவுடன் நட்ட நடு ரோட்டில் வண்டி நின்றது. சுற்று வட்டாரத்தில் எந்த ஊரும் இல்லை. சிவராமன் வண்டியிலிருந்து இறங்கினார். “எல்லோரும் இறங்குங்கள்’ என்றார். ஒன்றும் புரியாமல் எல்லோரும் இறங்கினோம். “சா.க. (கணேசன்) சொன்னால், அது எப்படித் தப்பாக இருக்கமுடியும்? திருப்பெருந்துறை பூமிக்குள் போய்விட்டது. இப்பொழுது வண்டியைச் சுற்றி வந்து திருப்பெருந்துறை ஈசனுக்கு வணக்கம் செலுத்துவோம்’ என்றார். அப்படியே அனைவரும் செய்தோம். பிறகு வண்டியில் ஏறிக்கொண்டு “டேய் சம்பந்தா, நீ சொன்ன திருப்பெருந்துறைக்கு இனிமேல் போகலாம்’ என்றார். பிறகு திருப்பெருந்துறை சென்று வழிபட்டுவிட்டு, காரைக்குடி திரும்பினோம்.

மிக்க ஆவலோடு கணேசன் “என்ன சிவராம்ஜி! நான் சொன்னபடி திருப்பெருந்துறை சென்றீர்களா, தரிசனம் செய்தீர்களா?’ என்று கேட்டார். ஒரு சிறிதும் சிரிப்பில்லாமல் “நீ சொன்ன திருப்பெருந்துறைக்கும் சென்றோம். இந்தப் பயல் ஏழு மைல் தூரத்தில் உள்ள திருப்பெருந்துறைக் கோயிலைக் காட்டினான். அந்தத் திருப்பெருந்துறையையும் தரிசனம் செய்தோம்.’ ஒரு சின்ன வித்தியாசம். நீ சொன்ன இடத்தில் இருந்த அத்திருப்பெருந்துறை முழுவதும் பூமிக்கு அடியில் போய்விட்டது. நீ தவறு சொல்லமாட்டாய் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பதால் அந்த இடத்தில் இறங்கி சுற்றிவந்து வழிபட்டோ ம். இந்தப் பயல் காட்டிய புதிய திருப்பெருந்துறையையும் தரிசனம் செய்துவந்தோம்.’  இத்தனைக்கும் ஒரு புன்சிரிப்புக்கூட இல்லால் பேசினார் சிவராமன். அந்த மாமனிதரின் மற்றொரு பக்கம் இது.

இவையனைத்தும் ஒரு புறமிருக்க, சிவராமன் அவர்கள் மூலமாக இறைவனே எனக்கொரு பேருதவி செய்தான். அதை விவரிப்பது இன்றியமையாததாகும்.

அமரர் கிருஷ்ணசாமிப் பிள்ளை திருமதி ருக்குமணி அம்மாள் என்ற தம்பதியர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தந்து “பன்னிரு திருமுறைக் கட்டில்’ என்ற ஒன்றை நிறுவினர். அதன் சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக அந்த அமைப்பின் கிளையாகக் காஞ்சியில் நிறுவிய தத்துவத் துறையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். பெரிய புராணத்தைப் பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தேன். அமரர் டாக்டர் நஞ்சுண்டன் என்னுடன் பணிபுரிந்தார். அவரிடம் ரிக்கு வேதம், கிருஷ்ண யசுர் வேதம் ஆகியவற்றை ஓரளவு பயின்றுவந்தேன்.

ஏ.என்.சிவராமன்
ஏ.என்.சிவராமன்
கிருஷ்ண யசுர் வேதத்தின் நான்காவது பிரபாடகத்தின் இறுதியில் அமைந்துள்ள ஸ்ரீருத்ரம்பற்றி ஒரு நெடிய ஆய்வை மேற்கொண்டேன். அந்த மூன்று ஆண்டுகள் உழைப்பின் பயனாகப் “பெரிய புராணம் ஓர் ஆய்வு’  நூலை எழுதி முடித்தேன். ஸ்ரீருத்ரம் பற்றிய ஆய்வு அந்த நூலில் இடம்பெற்றாலும், இது எந்த நேரத்தில் யாரால் எப்படி யாகமாகச் செய்யப்பெற்றது என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே, 1985 இல் “பெரியபுராணம் ஓர் ஆய்வு’ 800 பக்கங்களுக்கு மேல் உள்ள பெருநூலாக வெளிவந்தாலும் ஸ்ரீருத்திரத்தின் அடிப்படையென்ன என்பதுபற்றி அப்பதிப்பில் ஒன்றும் எழுத முடியவில்லை. இக்குறை என்மனத்தை உறுத்திக் கொண்டேயிருந்தது.

ஏ.என். சிவராமன் அவர்கள் கிருஷ்ண யசுர் வேதத்தைப் பெரிய ஒலி நாடாக்களில் பதிவு செய்து, எங்குச் சென்றாலும் அதை எடுத்துச் செல்வது வழக்கம். ஓய்வு நேரங்களில் அதை இயந்திரத்தில் ஏற்றித் தன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக “இயர் போனைப் பயன்படுத்திக் கேட்டுக் கொண்டேயிருப்பார்.

ஒரு முறை கம்பன் விழாவிற்காகக் காரைக்குடியில் கம்பன் மணிமண்டபத்தில் நாங்கள் தங்கியிருந்தபோது “யசுர் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்களே, ஸ்ரீருத்திரம் எங்கே எப்பொழுது செய்யப்பெற்றது என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன்.

புன்சிரிப்புடன் “சம்பந்தா! ஒவ்வொரு ஒலி நாடாவும் 1200 அடிநீளமுள்ள  ஒலிநாடாக்கள். இதுபோல் பத்தொன்பது ஒலிநாடாக்கள் உள்ளன. இதில் எங்கே போய்க் கண்டு பிடிப்பது” என்றார்.

“எப்படியாவது தாங்கள்தான் உதவி செய்யவேண்டும்’ என்றவுடன், ஒரு விநாடி கண்ணை மூடிக்கொண்டிருந்து விட்டு, “சம்பந்தா! நீயும் கண்ணை மூடிக்கொண்டு ஒலிநாடாக்கள் வரிசையாக இருக்கும் இந்தப் பெட்டியில் கையை வைத்து ஒன்றை எடு” என்றார்.

‘சிவராமா இது என்ன கொடுமை! நீங்கள் கிளிஜோசியக்காரனும் அல்லர். நான் ஜோசியம் கேட்க வந்தவனும் அல்லன்’ என்று சொல்லிச் சிரித்தேன். இதற்குள் எங்களைச் சுற்றி ஐம்பது பேருக்குமேல் கூடிவிட்டனர்.

அதுபற்றியே கவலைப்படாத சிவராமன் அவர்கள் “சம்பந்தா! நான் சொல்லுகிறபடி செய். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்றார். வேறு வழியில்லாமல், ஆண்டவனை மனத்தில் நினைத்துக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டு ஒரு ஒலிநாடாவை எடுத்து அவரிடம் தந்தேன். ஒலிபெருக்கியை காதில் மாட்டிக் கொண்டு நாடாவை இயந்திரத்தில் சுழலவிட்டார். அவர் முகம் மலர்ந்துவிட்டது. “சம்பந்தா! நீ அதிர்ஷ்டக்காரன். நீ கேட்டது கிடைத்துவிட்டது” என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

சற்றும் எதிர்பாராத ஓர் அதிசயம் அன்று காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் காலை எட்டுமணியளவில் நடைபெற்றுவிட்டது. பல ஆண்டுகளாக நான் தேடிய வேதத்தின் ஒரு பகுதி இப்பொழுது கைமேல் கிடைத்துவிட்டது.

கருட சயனம் என்ற ஒரு யாகம் ஆயிரத்தெட்டு (1008) செங்கற்களைக் கருட வடிவில் புதைத்து அதன் வயிற்றுப் பகுதியில் இருந்துகொண்டு செய்யப் பெறுவதாகும். யாகத்தைப் புரியும் ஆச்சாரியன் வயிற்றுப் பகுதியில் அமர்ந்துவிட்டான். பணம் தந்து யாகம் நடத்தும் தலைவன் வெளியே இருந்துகொண்டு “யாகத்தைத் தொடங்கலாமா?’ என்கிறான்.

அப்பொழுது ஆச்சாரியன் பின்வருமாறு விடைகூறுகிறான். “ஏனைய யாகங்களில் உருத்திரனுக்கு அவிஸ் இல்லாததுபோல இந்த யாகத்திலும் அவனுக்கு அவிஸ் கிடையாது. ஆனால் மிகக் கொடியவனாகிய ருத்திரன் இந்த யாகம் நிறைவேறாமல் ஏதாவது குழப்படி செய்துவிடுவான். எனவே, அவனைத் திருப்திப்படுத்தும் முறையில் இந்தக் கருடப் பறவையில் இடது இறக்கைக்கு வெளியே அவனுக்கு ஒரு ஹோமம் செய்ய வேண்டும். இந்த யாகத்தில் பயன்படுத்தக் கூடாத பொருள்களைக் கொண்டே அந்த ஹோமத்தைச் செய்யவேண்டும். இந்த யாகத்தில் செப்புப் பாத்திரத்தைப் பயன்படுத்துகிறோம். மண் சட்டியைத் தொடவே கூடாது. இந்த யாகத்தில் காராம்பசுவின் பாலைப் பயன்படுத்துகிறோம். ஆட்டுப்பால் பக்கத்தில் கூட வரக்கூடாது. இந்த யாகத்தில் பாலை நெருப்பில் எடுத்துச் சொரியும் “சுரு’ என்ற கரண்டிபோல மாவிலையைப் பயன்படுத்துகிறோம். எருக்கிலையைத் தொடவே கூடாது. இப்பொழுது இடப்புற இறக்கைக்கு வெளியே அமர்ந்துகொண்டு, ருத்திரனுக்கு ஒரு ஹோமம் செய்யப் போகிறேன். மண்சட்டியில் ஆட்டுப்பாலை நிரப்பிக் கொண்டு, மாவிலைக்குப் பதிலாக எருக்கிலையைப் பயன்படுத்தி, ஸ்ரீருத்திர மந்திரங்களைச் சொல்லி உருத்திரனுக்கு இதைச் செய்துவிட்டால் அவன் திருப்தியடைந்துவிடுவான். எனவே, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டான் ஆசாரியன் – என்ற பகுதி ஸ்ரீருத்திரத்தின் அநுவாகமாக உள்ளது என்பதை அன்று எனக்குத் தெளிவுபடுத்தியவர் ஏ.என். சிவராமன் அவர்களேயாவார்.

அவர் தந்த விளக்கத்தைச் சற்று விரிவாக எழுதிப் “பெரிய புராணம் ஓர் ஆய்வு’ என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் பிற்சேர்க்கை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன். இந்தப் பேருபகாரத்தைச் செய்தவர் ஏ.என். சிவராமன் என்ற மாமனிதரேயாவார்.

Leave a Reply