இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது.

ஸ்ரீமத் ராமானுஜர்

 

உறையூர் சோழராஜாவிடம் மெய்காப்பாளனாக இருந்தவர் பிள்ளை உறங்காவில்லி. அவர் மனைவி பொன்னாச்சியார். மிகுந்த அழகுள்ளவர். அவர் கண்ணழகில் மயங்கிய பிள்ளை உறங்காவில்லி, வெளியே ஊழியத்துக்குப் போகும் போதும் பிரிய மனமின்றி உடனழைத்துச் செல்வார். அதுவும் வெயிலில் மேனி கறுக்கக் கூடாதென்பதால் குடை பிடித்துக்கொண்டு போவார். மனையாளின் அழகு அவரை அப்படி மயக்கியிருந்தது. அதனால் மனையாளின் பின்னே சேவகனாய்ச் சென்ற இவரை ஊரார் கேலி பேசியதில் வியப்பில்லையே?

ஒரு நாள் நண்பகல் . காவிரிக் கரையில் மகான் ராமானுஜர் தம் சீடர்களுடன் இருக்கும் போது பொன்னாச்சியார் பின்னே சென்ற பிள்ளை உறங்காவில்லியின் செயலைக் கண்டார். இப்படியோர் பெண்பித்தரோ? என்று வியந்து, அவரைத் திருத்திப்பணி கொள்ள எண்ணினார். தம் சீடர்களிடம் அவரை அழைத்து வரச் சொன்னார். வந்தவரிடம் அவர் செயல் குறித்து வினவ, அவரோ இவள் கண்ணழகில் ஈடுபட்டு இப்படிச் செய்கிறேன் என்றார். எம்பெருமானார் பிள்ளை உறங்காவில்லியிடம் சொன்னார̷் 0; இதுவோ அழிந்துவிடும் அழகு. நிலையில்லாதது. நிலையான, இதைக்காட்டிலும் பேரழகை உமக்குக் காட்டுகிறேன்… கண்டால் நீர் இனி இச்செயலை விட்டுவிடுவீரோ? என்றார்.

சொல்லிவிட்டு, திருவரங்கம் அரங்கனின் சன்னதி நோக்கி அழைத்துச் சென்றார். அரவணைத்துயிலும் அரங்கனின் பேரழகை , கண்ணழகைக் காட்டி, அந்த அழகை அனுபவிக்கும் உணர்வையும் ஆனந்தத்தையும் அவருக்கு ஊட்டினார். அரங்கன் காட்சி கண்ட அக்கணமே பிள்ளை உறங்காவில்லி, எம்பெருமானார் அடிபணிந்து தாசரானார். அவருக்கு ஞான பக்தி வைராக்கியங்கள் வளர்ந்தன.

பங்குனி பிரம்மோற்சவ தீர்த்த வாரி சமயம் நீராடப் போகும் போது. முதலியாண்டான் என்ற சீடர் கரம் பற்றி நீராடப் புகுவார் ராமானுஜர். நீராடி முடித்து கரையேறும்போது பிள்ளை உறங்காவில்லி தாசரின் கரம் பற்றி எழுவார். இது வர்ணாசிரம தர்மத்திற்கு விரோதமானது என்றும் பிராமணன் கீழ்குலத்தோனைத் தொடுவது தவறல்லவோ என்று கூறி சீடர்கள் ராமானுஜரின் செயலுக்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு அவர் இப்படி பதிலளித்தார்…

எத்தனை தான் ஞானம் பெற்றாலும் உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணமே ஆணவமாக நின்று, இறைவனை அடையும் நிலையான அடியார்க்கு அடிமை என்ற நைச்யம்(தாழ்ந்த நிலை) பெற முடியாமல் போய் விடுகிறது. எனவே இப்பிறவியால் உண்டான அகங்காரத்தை, அகங்காரமே சிறிதுமற்ற இந்த அடியவரைத் தீண்டி உடல் சுத்தி செய்து கொள்கிறேன்… என்றார்.

பிறப்பின் பெருமையால் ஒருவன் அகங்காரம் கொள்வதோ, அல்லது மனத்தாழ்ச்சி கொள்வதோ தகாது. இறைவனை அடைய விரும்பும் ஒவ்வொரு ஆன்மிக உள்ளமும் மகான் ராமானுஜரின் இந்த உபதேசத்தை மனத்தில் கொள்ள் வேண்டும்.

பிள்ளை உறங்காவில்லி தாசரின் இந்தக் கதையிலிருந்து இன்னொரு செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. பிள்ளை உறங்காவில்லி மனையாளின் பின்னே மோகத்தால் சுற்றி வந்தார். எம்பெருமானார் அவரை அரங்கனிடம் ஆற்றுப்படுத்திய பிறகு, சோழ ராஜனிடம் செய்து வந்த சேவையை விட்டு, அரங்கன் மேல் பக்தியும் அன்பும் கொண்டு  கையில் வாளேந்தி பெருமாளின் விக்கிரகத்திற்குப் பாதுகாவலாய் செல்லத்தொடங்கினார்.

இவர் பரமபதித்த போது, அவருடைய திருமேனிக்கு பொன்னாச்சியார் கண்ணீர் உகக்காமல் சடங்குகளை உடனிருந்து ஆற்றினார். அத்திருமேனி கொண்டு செல்லப்பட்டு அவர் பார்வையிலிருந்து மறையும் வரை இருந்து, மறைந்ததும் தன் உடலை விட்டு உயிர் பிரியப் பெற்றார். இந்த ஆச்சர்யத்தை அறிந்து இரு திருமேனிகளையும் ஒன்றாய்த் தகனம் செய்தார்கள்.

இருவரும் கொண்ட அன்பின் ஆழம் அத்தகையது. பிள்ளையுறங்காவில்லி மனைவிதாசனாய் இருந்தபோது மனைவியின் பின் இவர் சென்றார். அவரே அரங்கன் தாசனாய் ஆனபின்பு, பொன்னாச்சியார் இவர் பின்னே சென்றார். இறை பக்தியின் பெருமை அத்தகையது. இதற்குக் காரணமாக இருந்தது, எம்பெருமானாரின் திருவுள்ளம்.

 

Leave a Reply