திருவாய்மொழி ஐந்தாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center; ">5ஆம் பத்து 6ஆம் திருவாய்மொழி

3288

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்

கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்,

கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்

கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,

கடல்ஞாலம் முண்டேனும் யானே என்னும்

கடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?,

கடல்ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்

கடல்ஞா லத்தென் மகள்கற் கின்றனவே? 5.6.1

 

3289

கற்கும்கல் விக்கெல்லை யிலனே என்னும்

கற்கும்கல்வி யாவேனும் யானே என்னும்,

கற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும்

கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,

கற்கும்கல்விச் சாரமும் யானே என்னும்

கற்கும்கல்வி நாதன்வன் தேறக் கொலோ?,

கற்கும் கல்வியீர்க் கிவையென் சொல்லுகேன்

கற்கும் கல்வியென் மகள்காண் கின்றனவே? 5.6.2

 

3290

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்

காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்,

காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்

காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்,

காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்

காண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ?

காண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்

காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றனவே? 5.6.3

 

3291

செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்

செய்வானின் றனகளும் யானே என்னும்,

செய்துமுன் னிறந்தனவும் யானே என்னும்

செய்கைப்பய னுண்பேனும் யானே என்னும்,

செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்

செய்யகம லக்கண்ண னேறக் கொலோ?

செய்யவுல கத்தீர்க் கிவையென் சொல்லுகேன்

செய்ய கனிவா யிளமான் திறத்தே? 5.6.4

 

3292

திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்

திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,

திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்

திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,

திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்

திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?

திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்

திறம்பா தென்திரு மகளெய் தினவே? 5.6.5

 

3293

இனவேய்மலை யேந்தினேன் யானே என்னும்

இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்,

இனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும்

இனவாநிரை காத்தேனும் யானே என்னும்,

இனவாயர் தலைவனும் யானே என்னும்

இனத்தேவர் தலைவன்வந் தேறக் கொலோ?,

இனவேற்கண் நல்லீர்க் கிவையென் சொல்லுகேன்

இனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே? 5.6.6

 

3294

உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும்

உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும்,

உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்

உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,

உற்றார்களுக் குற்றேனும் யானே என்னும்

உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?,

உற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன்யான்

உற்றென் னுடைப்பே தையுரைக் கின்றனவே? 5.6.7

 

3295

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்

உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,

உரைக்கின்ற அமரரும் யானே என்னும்

உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,

உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்

உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?,

உரைக்கின்ற உலகத் தீர்க்கென் சொல்லுகேன்

உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே? 5.6.8

 

3296

கொடிய வினையாது மிலனே என்னும்

கொடியவினை யாவேனும் யானே என்னும்,

கொடியவினை செய்வேனும் யானே என்னும்

கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்,

கொடியா னிலங்கைசெற் றேனே என்னும்

கொடியபுள் ளுடையவ னேறக் கொலோ?,

கொடிய வுலகத்தீர்க் கிவையென் சொல்லுகேன்

கொடியேன் கொடியென் மகள்கோ லங்களே? 5.6.9

 

3297

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்

கோலமில் நரகமும் யானே என்னும்,

கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்

கோலங்கொ ளுயிர்களும் யானே என்னும்,

கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்

கோலங்கொள் முகில்வண்ண னேறக் கொலோ?

கோலங்கொ ளுலகத் தீர்க்கென் சொல்லுகேன்

கோலந் திகழ்கோ தையென்கூந் தலுக்கே. 5.6.10

 

3298

கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்

குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை

வாய்ந்த வழுதி நாடன் மன்னு

குருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து,

ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்

இவையுமோர் பத்தும்வல் லார்,உலகில்

ஏந்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால்

அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே. 5.6.11

Leave a Reply