திருவாய்மொழி ஐந்தாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center; ">5ஆம் பத்து 4ஆம் திருவாய்மொழி

3266

ஊரெல்லாம் துஞ்சி யுலகெல்லாம் நள்ளிருளாய்,

நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்,

பாரெல்லா முண்டநம் பாம்பணையான் வாரானால்,

ஆரெல்லே. வல்வினையேன் ஆவிகாப் பாரினையே? (2) 5.4.1

 

3267

ஆவிகாப் பாரினியார்? ஆழ்கடல்மண் விண்மூடி,

மாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால்,

காவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால்,

பாவியேன் நெஞ்சமே. நீயும்பாங் கல்லையே? 5.4.2

 

3268

நீயும்பாங் கல்லைகாண் நெஞ்சமே. நீளிரவும்,

ஓயும் பொழுதின்றி யூழியாய் நீண்டதால்,

காயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்,

மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே. 5.4.3

 

3269

பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று,

ஒண்சுடரோன் வாரா தொளித்தான்,இம் மண்ணளந்த

கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால்,

எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே? 5.4.4

 

3270

ஆரென்னை யாராய்வார்? அன்னையரும் தோழியரும்,

நீரென்னே? என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்,

காரன்ன மேனிநங் கண்ணனும் வாரானால்,

பேரென்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே. 5.4.5

 

3271

பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்,

முன்நின் றிராவூழி கண்புதைய மூடிற்றால்,

மன்னின்ற சக்கரத்தெம் மாயவனும் வாரானால்,

இந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே? 5.4.6

 

3272

காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின் நுண்துளியாய்,

சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்,

தூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால்,

தீப்பால வல்வினையேன் தெய்வங்காள். என்செய்கேன்? 5.4.7

 

3273

தெய்வங்காள். என்செய்கேன்?ஓரிரவேழ் ஊழியாய்,

மெய்வந்து நின்றென தாவி மெலிவிக்கும்

கைவந்த சக்கரதென் கண்ணனும் வாரானால்,

தைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானடுமே. 5.4.8

 

3274

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,

அஞ்சுடர வெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,

செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,

நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே. 5.4.9

 

3275

நின்றுருகு கின்றேனே போல நெடுவானம்,

சென்றுருகி நுண்துளியாய்ச்செல்கின்ற கங்குல்வாய்,

அன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரானென்று,

ஒன்றொருகால் சொல்லாதுலகோ உறங்குமே. 5.4.10

 

3276

உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை,

சிறந்தபொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொல்,

நிறங்கிளர்ந்த அந்தாதி யாயிரத்து ளிப்பத்தால்,

இறந்துபோய் வைகுந்தம் சேராவா றெங்ஙனேயோ? 5.4.11

Leave a Reply