ஓதுவார்கள் நியமனம்: திமுக., அரசிடம் தருமை ஆதீனம் முன்வைத்த வேண்டுகோள்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

sekharbabu with stalin

ஓதுவார்கள் நியமனம் தொடர்பாக, ஆளும் திமுக., அரசிடம் தருமை ஆதீனம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில்,

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நேற்று ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் சிலர் முழுநேரமாக முறையாக கற்று தேர்ந்தவர்கள் இல்லை என்பது ஊடகச் செய்திகள் வாயிலாக தெரியவருகிறது. முறையாக ஐந்தாண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களை பாதிக்கும்படி செய்யப்பட்ட தவறான நியமனமாக இதனை கருதுகிறோம். இது தவறான முன்னுதாரணமாகவும் ஆகும்.
80 ஆண்டு காலமாக தேவார பாடசாலை நடத்தி வருகிறோம், பெரும்பான்மையான ஓதுவார்கள் அனைவரும் இங்கு பயின்றவர்களே என்கிற தார்மீக அடிப்படையில் அரசின் கவனத்திற்கு இவற்றை கொண்டு வருகிறோம்.

ஐந்து ஆண்டு தேவார பாடசாலைகளில் பயின்றவர்களை மட்டுமே ஓதுவாராக முன்னர் பணி நியமனம் செய்துவந்தனர் அவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. அதனை தளர்த்தி நான்காண்டு பல்கலைக்கழகத்திலும் மூன்றாண்டு இசைப்பள்ளியிலும் முழுநேரமாகப் பயின்றவர்களை நியமனம் செய்து வந்த நிலையில் தற்போது இன்னும் குறைபாடுடைய வகையில் மாதம் ஒருவகுப்பு ஈராண்டு 24 வகுப்பில் மட்டும் கலந்துகொண்டு பெற்ற சான்றிதழ் அங்கீகரிக்க பட்டமை முறையான தேர்ந்த நியமனமாயிராது. அது ஓதுவார் பணிக்கான பாடத் திட்டமும் கிடையாது.

தற்போது தேவாரப் பாடசாலைகள், பல்கலைக்கழகம், இசைப்பள்ளில் முழுநேரமாக அர்பணிப்போடு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கும், இத்துறைக்கு மாணவர்கள் சேர்வதும் குறைவும் ஆகையால் திருக்கோயிலில் ஓதுவார் பணிக்குரிய தரமான தகுதியான நியமனங்களையே செய்தல் வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் திருக்கோயில்களில் ஓதுவாமூர்த்தியாக பணி செய்வோர்க்குரியவர்களை கண்ணியதோடு நடத்தல் வேண்டும். ஓதுவார் பணியினை தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்தி புனிதமான திருமுறைகளை ஓதும் நன்நெறியுடையவர்களை தரம் தாழ்த்துவதும் மாற்றப்பட வேண்டிய நடைமுறை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

“பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்… புள்ளிருக்குவேளுரே” – இவ்வாறு தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply