மண்ணில் புதைகிறது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் : விரிசல் பிரச்னைக்கு பிறகு கிளம்பும் பூதாகரம்

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றுதலுக்குரிய திருத்தலமும் ஆகும். 156 ஏக்கர் பரப்பளவில், சப்த எனப்படும் ஏழு பிரகாரங்கள் மற்றும் 21 கோபுரங்களுடன் கோவில் அமைந்துள்ளது. கடந்த மே மாதம், ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசலை கண்டறிய ஒட்டப்பட்டிருந்த பெரும்பாலான கண்ணாடித் துண்டுகள் உடைந்துள்ளதை புகைப்பட ஆதாரமாக கொண்டு, “ராஜகோபுரத்தில் விரிசல்’ என்று பெரிய அளவில் செய்தி வெளியாயின.

 

அதற்கு பதிலளிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் விளக்க அறிக்கை வெளியிட்டனர். அதில், “ராஜகோபுரத்தின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடப் பணியின்போது பயன்படுத்திய மரக்கம்பு, இரும்பு பட்டையால், விரிசலை கண்டறிய ஒட்டப்பட்ட கண்ணாடித்துண்டு உடைந்திருக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

 

அதே அறிக்கையில், வடகிழக்கு மூலையில், வடக்கு பகுதியிலும், தென்மேற்கு தெற்கு பகுதியிலும், கல்காரத்தின் சிற்ப பகுதியிலும் புதியதாக விரிசல் “ஏற்கனவே’ ஏற்பட்டுள்ளன என்றும், “விபரமாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிக்கையில் மூலம்தான், “கோபுரம் புதைக்கிறது; கோபுர உச்சி நகர்கிறது’ போன்ற பூதாகரமான விஷயமும் அம்பலமாகியுள்ளது.

 

ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்ட 1984ம் ஆண்டே, முதல் நிலையில் வெடிப்பும், கல்காரம் வடமேற்கு, தென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களில் வெடிப்பும் ஏற்பட்டது. வெடிப்பை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 1986 ஜன.,8ல் முதல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

 

சென்னை பொது தலைமை பொறியாளர் (பொது) தலைமையில், சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர், கட்டுமான ஆராய்ச்சி நிலைய இயக்குனர், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மணி சுந்தரம், முன்னாள் திருச்சி ஆர்.இ.சி., முதல்வர் நாகரெத்தினம், சென்னை கண்காணிப்புப் பொறியாளர் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்புப் பொறியாளர் ராஜகோபுரத்தை ஆய்வு செய்தனர்.

 

“அக்கௌஸ்டிக் எமிசன் டெஸ்ட்’ : ஆய்வின் முடிவில், “கல்காரம் கட்டப்பட்டு 3 00 ஆண்டு ஆனதால், 13.5 செ.மீ., நிலத்தில் கட்டிட கல்காரம் இறங்கி இறங்கலாம்’ என்று தெரிவித்தனர். அதை உறுதி செய்தவதற்கும், பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் இரண்டாவதாக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதில், சென்னை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் தலைமையில், திருச்சி ஆர்.இ.சி., முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்புப் பொறியாளர், “டெமேக் ஸ்டெடி’ தொடர்ந்து செய்ய அறிவுறுத்தினர். சென்னை நெடுஞ்சாலைத்துறை (வடிவமைப்பு) ஓய்வுப் பெற்ற கண்காணிப்புப் பொறியாளர் சீனிவாசராவ், கிண்டி பொறியியல் கல்லூரி மண்வளத்துறை பேராசிரியர் பூமிநாதன் பரிந்துரையால், “அக்கௌஸ்டிக் எமிசன் டெஸ்ட்’ பொதுப்பணித்துறை மூலம் செய்யப்பட்டது.

கோபுரம் புதைவு: தொழில்நுட்ப ஆய்வாக, நெடுஞ்சாலைத்துறையினரால் மண் பரிசோதனை செய்யப்பட்டு, கோபுரம் அருகே துளையிடப்பட்டு மண்ணின் நிலை பரிசோதிக்கப்பட்டது. கோபுரம் கட்டி முடித்து, மூன்று ஆண்டு 8 மாதம் கழித்து, 18 செ.மீ., மண்ணில் இறங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கோபுர உச்சி நகர்வு: கோபுரத்தில் 29 இடத்தில் “டெமெக் ஸ்டடி’ ஆய்வு செய்யப்பட்டு, வெடிப்பு 1 மில்லி மீட்டரில் இருந்து 3 மில்லி மீட்டர் வரை சென்றுள்ளதாக கூறப்பட்டது. சென்னை அண்ணா பல்கலையின், “ரிமோட் சென்சிங்’ (நகர்வு மின்னணுவியல்) ஆய்வின் மூலம் கோபுர உச்சி சுமார் 0.6 அங்குலம் முதல் 7.1 அங்குலம் வரை நகர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. சென்னை மண்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நடத்திய “அக்கௌஸ்டிக்’ பொது ஆய்வின் படி, மண்ணில் எவ்வித நகர்வும் இல்லை எனப்பட்டது.

“அஸ்திவாரத்தில் கோபுர கட்டிடம் இறங்கும் தன்மை முடிவுக்கு வந்துள்ளது. அஸ்திவாரத்தின் மண் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. வெடிப்பின் அளவு மற்றும் கட்டிடத்தின் தன்மையில் பயப்படும் படியாக இனி இல்லை. தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு தனது இறுதிக்கட்ட நிலைக்கு வந்து நின்றுள்ளது. இதன்மூலம் கல்காரத்தை கெட்டிப்படுத்தவேண்டும்’ என்பதை 2ம் நிபுணர் குழு ஆய்வின் முடிவாக தெரிவித்தனர்

News:: https://www.dinamalar.com/News_Detail.asp?Id=108070

Leave a Reply