
வேளாளர் சிறப்பு
யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்
இயற்றிநல் லேர்பெ றுவதும்,
இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்
டென்றும்நல் லேர்பெ றுவதும்,
வசனாதி தப்பாது தனதா னியந் தேடி
வசியர்நல் லேர்பெ றுவதும்,
மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிக
வளமைபெற் றேர்பெ றுவதும்,
திசைதோறும் உள்ளபல தேவா லயம்பூசை
செய்யுநல் லேர்பெ றுவதும்,
சீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர்
செய்யும்மே ழிப்பெ ருமைகாண்
அசையாது வெள்ளிமலை தனில்மேவி வாழ்கின்ற
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
வெள்ளிமலையில் எப்போதும் பொருந்தி வீற்றிருக்கும் பெரியோனே!,
அருமை தேவனே!, மறையவர் வேள்வி முதலிய தொழில்களைத் தவறாமற்
செய்து பேரழகு பெறுவதும், முடியரசர் எப்போதும் பகைவரை
வென்றிகொண்டு, ஆட்சி புரிந்து பேரழகடைவதும், வணிகர் சொல் முதலிய
பிறழாமல் பொன்னும் தானியமும் ஈட்டிப் பேரழகு பெறுவதும், மேலும்
உள்ள யாவரும் வறுமை என்று கூறாமல் மிக்க வளம் பெற்று அழகுறுவதும்,
எல்லாத் திக்கினும் இருக்கும் பல திருக்கோயில்களும் வழிபாடு பெற்று
நல்லழகு பெறுவதும், புகழ் பெற்ற பசிய குவளை மாலை அணிந்த
வேளாளர் புரியும் உழவின் பெருமையாகும்.