Tag: ஆண்டாள்

  • ஆண்டாளின் ‘திரு’ நட்சத்திரம் – ‘திரு’ ஆடிப் பூரம்

    ஆண்டாளின் ‘திரு’ நட்சத்திரம் – ‘திரு’ ஆடிப் பூரம்

    – Advertisement –

    andal srivilliputhur

    Thank you for reading this Dhinasari News Article.
    Don’t forget to Subscribe!

    ஆண்டாள் – பூரம் – வில்லிபுத்தூர் – திரு இன்றி இவை முழுமைபெறாது!

    <

    p class=”has-text-align-center has-luminous-vivid-amber-background-color has-background”>கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
    ஆசிரியர் கலைமகள்

    தமிழகத்தில் உள்ள விருதுநகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். பன்னிரு ஆழ்வார்களில், பெரியாழ்வார் அவதரித்த ஸ்தலம் ஆகும் இது. ஆனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியில், ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் பெரியாழ்வார். ஆடி மாத வளர்பிறை சதுர்த்தியில் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார் ஸ்ரீ ஆண்டாள். எனவே ஆடிப்பூரம் விசேஷமானது!!
    ஸ்ரீ ரங்கமன்னாருக்காக, நந்தவனத்தில் பூக்களைப் பறித்து வந்து தொடுத்துச் சார்த்துவார் பெரியாழ்வார். அப்படி ஒருநாள், நந்தவனத்துக்கு அவர் வந்த வேளையில், துளசி மாடத்துக்கு அருகில், சர்வ தேஜஸ் பொருந்திய குழந்தையைக் கண்டார். ஆசை ஆசையாய் குழந்தையைத் தூக்கி வளர்த்தார். குழந்தைக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் கோதை என விவரிக்கிறது புராணம்.

    ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய துளசித் தோட்டத்தில்( குழந்தைப்பேறு இல்லாத பெரியாழ்வாரால்) கண்டு எடுக்கப்பட்டவருக்கு கோதை எனத் திருநாமம் சூட்டிவளர்த்து வந்தார்.

    Read also: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை..

    பெரியாழ்வார் இறைவனுக்கு வைத்த மாலையைத் தம் பெண் அணிந்து கொண்டது உகந்தது அன்று என வருந்தம் அடைந்தார்‌.

    வடபெருங்கோயிலுடையான் கனவில் தோன்றி, “அம்மாலை தமக்கு உகந்தது என்றும் இனி, கோதை சூடிக் களைந்த மாலையையே தனக்கு சூட்ட வேண்டும்” எனவும் பணித்தார். எனவே, அவர் தம் மகளை எம்பெருமானின் தேவிகளில் ஒருத்தி என எண்ணி ‘ஆண்டாள்’ எனவும் திருநாமம் சூட்டினார்.

    ஆண்டாள் அவதாரம் செய்த நாள் நளவருடம், ஆடிமாதம் கூடிய பூர நட்சத்திரத்தில், இக்குறிப்பின்படி ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்கிறார்கள்.

    பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்தே மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

    வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஆண்டாள் அருளியவை.

    மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. இதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கியவர் ஸ்ரீ காஞ்சி பெரியவர். சிவன் கோவில்களில் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடவும் ஏற்பாடு செய்தார் பெரியவர் என்பார்கள்!!

    தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர்கள் அரியணை ஏறும்போது பாடப்படுகிறது.

    பாவைப் பிரபந்தம் ஒரு முத்தமிழ் நூல் வகை. எப்படியெனில் வெண்பாவுக்குரிய வெண்தளை கொண்டு எட்டடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவாகப் பாடப்படுகிறது. எனவே இதில் இயற்றமிழ்ப் பாங்கு காணப்படுகிறது.

    கன்னிப் பெண்கள் இசையுடன் பாடியாடும் பல்வரிக் கூத்தாக சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் அம்மானை, தோள்நோக்கம், சாழல் கூறும் முதலியவற்றோடு பேராசிரியர் வெள்ளவாரணர் பாவைப் பாட்டைச் சேர்த்துத் தமது பன்னிரு திருமுறை வரலாற்றில் எழுதுவார். அப்படியாக இசைத் தமிழ்க் கூறும் நாடகத் தமிழ்க் கூறும் பாவைப் பிரபந்தத்தில் அமைந்திருக்கக் காணலாம் என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.

    ‘பாவை’ என்னும் சொல்லுக்குப் பொம்மை என்ற பொருளும் உண்டு! பஞ்சாய்க்கோரையால் பொம்மை செய்து இளம் பெண்கள் விளையாடுதல் பண்டைய வழக்கம். எனவே இளம் பெண்களைப் பாவையர் என்று அழைப்பதும் உண்டு

    ‘இது என்பாவை, பாவை இது என’ இது ஐங்குறுநூற்றுப் பாடல் தொடரில் வரும் வரியாகும். ‘பாவை’ என்பது இளம் பெண்ணையும், பொம்மையையும் முறையே குறிப்பதை அறிய முடிகிறது.

    ஆண்டாள் அருளிய ‘நாச்சியார் திருமொழி’ பாடல்களைப் படிக்கும் போது, சாதாரண ஆண் – பெண் உறவை மனதில் கொண்டு படித்தல் கூடாது. திருப்பாவையை நிறைவு செய்யும்போது, “மற்ற காமங்களை நீக்கி விடு” என்று ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானிடம் பிரார்த்திக்கிறாள் என்பதையும் மறந்து விடக்கூடாது!!

    அதே நினைவோடு நம் மனதில் உள்ள மனித இன்பங்களை அறவே ஒழித்து, ஓர் ஆன்மா, பரமாத்மா மீது கொண்ட காதலையும், பரமாத்மாவை நினைத்து ஏங்குவதையும், பரமாத்மாவை அல்லாது வேறு எதனுடனும் தனக்கு உறவு கூடாது என்பதையும், பரமாத்மாவுடன் அது திளைக்கும் இன்பத்தையும் மட்டுமே மனதில் திடமாகக் கொண்டு படிக்க வேண்டும். ஜீவாத்மா பரமாத்மா உறவை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாச்சியார் திருமொழி பாடல்களின் மிக உயர்ந்த கருத்துக்கள் புலப்படும்.

    ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

    ஆண்டாளின் இடத்தோளில் கிளி இருக்கும். ஆனால் மதுரை மீனாட்சி அம்மையிடம் கிளியானது வலத்தோளில் அமர்ந்திருக்கும். கிளிகள் வேதங்களை உலா வரும் பொழுது உச்சரிக்கும் என்கிற நம்பிக்கையும் இறை பக்தர்களிடம் உண்டு!! எனவேதான் அலங்காரம் செய்து அம்மன் உலா வரும் பொழுதும் ஆண்டாள் உலா வரும் பொழுதும் கிளியே பத்திரமாக சொருகுகி அழகு பார்க்கிறார்கள்.

    ஆண்டாள் கோவில் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு – மாதுளம் பூ, மரவல்லி இலை – கிளியின் உடல்; இறக்கைகள் – நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;, கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவார்கள். இவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர்.

    சாதாரண மனிதர்களைக்காட்டிலும் முனிவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களை விட ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள்.அவர்களுள்ளும் பெரியாழ்வார் மிகவும் உயர்ந்தவர். பெரியாழ்வாரையும் விஞ்சி உயர்ந்து நிற்பவர் ஆண்டாள் என்பது ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை கருத்து.

    வலது கையில் கிளி ஏந்திய மீனாட்சி யையும் இடது கையில் கிளி ஏந்திய ஆண்டாளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்தையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அழகையும் கீழே புகைப்படமாகக் காண்கிறீர்கள்..


    Source: தமிழ் தினசரி | dhinasari.com

  • திருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழிமழைக் கண்ணா (விளக்கம்)

    திருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழிமழைக் கண்ணா (விளக்கம்)

    thiruppavai 4 - Dhinasari Tamil

    திருப்பாவை – பாசுரம் -4

    ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
    ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
    பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
    ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
    தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கவுரை: மூன்றாம் பாசுரத்தில் நோன்பு நோற்பதால் கிடைக்கும் பலனைச் சொன்னார் ஆண்டாள். மும்மாரி பெய்து பசுக்கள் பாலால் இல்லம் நிறைத்து செல்வம் பெருகும் என்றவர், இந்தப் பாசுரத்தில் தாம் சொன்ன சுபிட்சத்துக்காக கண்ணனே கருணை மழையாகப் பொழிய வேண்டும் என்று வேண்டுகிறார். 

    மழை மண்டலத்துக்குத் தலைவனாக விளங்கும் கண்ணனே! உன் கொடையில் எதையும் நீ ஒளிக்காமல் அருள வேண்டும். நீ செய்ய வேண்டிய பணி ஒன்றும் உண்டு. அது, நீ கடலினுள் புகுந்து, அங்கிருந்து நீரினை முகந்து கொண்டு பேரொலி எழுப்பி கர்ஜனை செய்து, ஆகாயத்தின் மேல் ஏறி, ஊழி காலம் முதலான அனைத்துக்கும் காரணனாக விளங்கும் எம்பெருமானின் திருமேனியைப் போலே கறுத்து, பெருமை பொருந்திய சுந்தரத் தோளுடையானும், நாபியிலே கமல மலர் கொண்டு திகழும் பெருமானின் வலக்கையிலே திகழும் சக்கரத்தாழ்வானாகிய திருவாழியைப் போலே ஒளிர்ந்து, இடது கரத்தில் திகழும் பாஞ்சஜன்யப் பெரும் சங்கினைப் போலே நிலை நின்று முழக்கி, உன் சார்ங்கம் ஆகிற வில்லில் இருந்து விரைந்து புறப்படும் அம்புகளைப் போலே, இந்த உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும், கண்ணன் எம்மானுடன் கலந்து மகிழ நோன்பு நோற்கும் நாங்களும் உளம் மகிழ மார்கழி நீராட்டம் செய்யும்படி, தாமதம் ஏதுமின்றி மழை பொழிய வைத்திடுவாய்…- என்று கண்ணனை வேண்டுகிறார் ஆண்டாள்.

    மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை செய்யப் பணிக்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்!

    விளக்கவுரை: செங்கோட்டை ஶ்ரீராம்

    Source: தமிழ் தினசரி | dhinasari.com

  • திருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)

    திருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)

    thiruppavai 3 - Dhinasari Tamil

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
    ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
    வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கவுரை:

    இரண்டாம் பாசுரத்தில் நோன்பினைக் கடைப்பிடிக்க என்ன செய்ய வேண்டும், விலக்க வேண்டியவை எவை, கைக்கொள்ள வேண்டியவை எவை என்றெல்லாம் சொன்ன ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் நோன்பினால் உலகத்துக்கு விளையும் நலன்களை எடுத்துக் கூறுகிறார்.

    மகாபலி சக்ரவர்த்தி வார்த்த நீர் கையில் விழுந்தபோதே, ஆகாயம் அளவுக்கு வளர்ந்து தன் திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்த அந்த உத்தமனின் திருநாமங்களைப் பாடிக் கொண்டு, சுயநலனுடன் எதையும் வேண்டாமல், புருஷோத்தமன் மீது கொண்ட அன்பின் மிகுதியால் நோன்பு நோற்கிறோம்.
    நோன்புக்காக இவ்வாறு சங்கல்பம் செய்துகொண்டு நீராடினால் நாடு எங்கிலும் தீங்கு எதுவும் இல்லாமல் சுபிட்சமாக இருக்க மாதம் மும்மாரி பொழியும்.

    அந்த வளமையில், ஆகாயம் அளவுக்கு வளர்ந்து பெருத்துள்ள செந்நெல் பயிர்களின் நடுவே மீன்கள் துள்ள, அழகிய நெய்தலாகிற பூங்குவளை மலரில் விருப்பம் கொண்ட வண்டுகள் மயங்கி உறக்கம் கொள்ள, மாட்டுத் தொழுவத்தில் சலிக்காமல் பொருந்தியிருந்து இரு கைகளாலும் பிடித்து வலிக்க, பசுக்கள் மிகுதியான பாலை வழங்கி, பால் வெள்ளத்தாலே குடங்களை நிறைத்து நீங்காத செல்வம் நிறையும் படி செய்யும். பாவாய் நீ எழு என்று ஆண்டாள் நோன்பின் மகிமையை எடுத்துரைக்கிறார்.

    விளக்கம் – செங்கோட்டை ஶ்ரீராம்

    Source: தமிழ் தினசரி | dhinasari.com