e0af8d-e0ae95e0af8ae0ae9fe0aebf.jpg" style="display: block; margin: 1em auto">
![திருப்புகழ் கதைகள்: கொடியனைய இடை... 4 thiruppugazh stories](https://i0.wp.com/www.deivatamil.com/wp-content/uploads/2021/07/e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d-e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d-e0ae95e0af8ae0ae9fe0aebf-1.jpg?resize=300%2C169&ssl=1)
![திருப்புகழ் கதைகள்: கொடியனைய இடை... 2 thiruppugazh stories](https://i0.wp.com/www.deivatamil.com/wp-content/uploads/2021/07/e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d-e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d-e0ae95e0af8ae0ae9fe0aebf-2.jpg?resize=640%2C360&ssl=1)
திருப்புகழ் கதைகள் பகுதி 92
கொடியனைய – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அருணகிரிநாதர் அருளியுள்ள ஐம்பத்திமூன்றாவது திருப்புகழான கொடி அனைய இடை எனத்தொடங்கும் திருப்புகழும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். அருணகிரியார் முருகப்பெருமானை விளித்து பொதுமாதர் வலையில் சிக்கி அழியாமல், திருவடிக் கமலம் பெற அருள்வாய் என வேண்டும் பாடலிது. இனிப் பாடலைக் காணலாம்.
கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்
குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன்
குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் …..பண்புலாவக்
கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்
குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங்
குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந்து ……ஒன்றுபாய்மேல்
விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும்
வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும்
மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் …… செஞ்செநீடும்
வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென்
றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன்
விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந்து ….அன்புறாதோ
படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந்
துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம்
பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் ….சிந்தும்வேலா
படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன்
பழையஇறை யுருவமிலி அன்பர்பங் கன்பெரும்
பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணண் …… கங்கைமான்வாழ்
சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறுந்
தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண்
சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் ……பொங்கிநீடும்
சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின்
றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந்
தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந் …..தம்பிரானே.
இப்பாடலின் பொருளாவது – பணாமகுடத்துடன் விளங்கும் பாம்பினது உடலின் அங்கங்கள் கூறுபட்டுப் பிளக்குமாறு (பாதத்தாலும் மூக்காலும் எடுத்து) உதறுகின்ற ஒப்பற்ற மயிலின் மிசை எழுந்தருளி வந்து, தேவர்களது பகைவர்களாகிய அசுரர்கள் அனைவருடைய உடல்களும் கை கால் கழுத்து முதலிய சந்துகளும் பூட்டுவிட்டுச் சிந்தும்படிச் சிதறச் செய்த வேற்படையை உடையவரே!
மண்ணுலகத்தவர்களும் விண்ணுலகத்தவர்களும் சந்நிதியில் நின்று வணங்கும் எப்பொருட்கு மிறைவரும், தனக்கென ஓர் உருவமில்லாதவரும், அன்பர்களிடம் துணையாகப் பொருந்தியுள்ளவரும், எட்டு அருட்குணங்களை உடையவரும், அநாதி பரம்பொருளும், உலகிற்குப் பெருந்துன்பத்தைச் செய்த முப்புரங்களும் எரியுமாறு தீப்பொறியைச் சிந்திய சிவந்த அக்கினி நேத்திரத்தை உடையவரும், மான்போன்ற பார்வையுடைய கங்காதேவி வாழுகின்ற சடாமுடியின் மீது, அழகு பொருந்திய கொன்றை மலரும், குணத்தாலுயர்ந்த இளம்பிறைச் சந்திரனும், ஒளிபெற்ற சிவந்த கரத்திலே சகல லோகங்களையும் நீறாக்கும் வலியுடன் அமைதியோடிருக்கின்ற அக்கினியும், பொலிவுடன் நிலைபெற்றுள்ள மேனியை உடைய இடபதேவரும் உடைய சிவபெருமானது பரிசுத்தம் பொருந்திய அழகிய வாமபாகத்தில் இருந்துகொண்டு, எல்லா உலகங்களையும் ஈன்றருளியவரும், பொன்னிறத்தை உடையவருமாகிய உமாதேவியார் திருமுலைப்பால் தந்து அன்பு கொள்ளும் தமிழறிவுடையவரே! உயர்ந்த பரம்பொருளே! பிரணவோபதேசம் பெறும்பொருட்டு சிவபெருமான் வணங்குகின்ற தனிப்பெருந் தலைவரே!
மாதர்களிடத்து இன்பத்தில் அன்புறும் தீவினையை உடையவனும், நற்குணமடைதற்கு யோக்கியமான உயிரும் உடலும் வெந்தழிந்து, தத்தம் நிலைகெட அறிவற்றவழியிற் சேர்ந்துள்ள உலக மாயையுடையவனும், செம்மையான வயல்கள் நிலைத்துள்ளதும், மிகுந்த பொன்னொளியை வீசுவதும், அழகு நிலைப்பெற்றதுமாகிய திருச்செந்தூர் என்று கூறி நெஞ்சம் நெகிழ்ந்து உருகி, அத்திருத்தலத்தைத் தரிசிக்கவரும் அன்பில்லாதவனும், தருமஞ் செய்யாதவனுமாகிய அடியேனுக்கு, சிவஞானமயமாகிய தேவரீரது இளமையாகிய பாத தாமரைகள் இரண்டையும் விரும்பிக் கொடுத்துத் தேவரீரது திருவுளம் அன்பு செய்யாதோ? – என்பதாகும்.
![திருப்புகழ் கதைகள்: கொடியனைய இடை... 3 tiruchendur-murugan](https://i0.wp.com/www.deivatamil.com/wp-content/uploads/2021/07/e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d-e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d-e0ae95e0af8ae0ae9fe0aebf-3.jpg?resize=640%2C360&ssl=1)
இப்பாடலில் வரும் செந்திலென்-றவிழவுள முருகிவரு மன்பிலன் என்ற சொற்களில் ஆறுமுகப் பெருமான் அடியார் பொருட்டு திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய திருத்தலங்களுள் திருச்செந்தூர் தலையாக விளங்குவது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. கடற்கரையின் காட்சிக்கு இனியதாய்க் காண்பார் கண்களையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகுடையது. குமாரக் கடவுள் சூராதி அவுணரைக் கொன்றருள வேண்டி, இலக்கத்து ஒன்பான் வீரர்களுடன் வந்து தங்கி, வீரவாகு தேவரைத் தூது அனுப்பி, தேவர் குழாம் சூழ வீற்றிருந்தருளிய மேன்மை உடையது. பாண்டியன் மகளாகிய அங்க சுந்தரிக்குக் குதிரை முகத்தை மாற்றி மனித முகத்தை நல்கிய மகிமை உடையது. குமரகுருபரருடைய ஊமைத் தன்மையைத் தவிர்த்து தெய்வ வாக்கை வழங்கி அவரால் கந்தர் கலிவெண்பாவால் துதிக்கப் பெற்றது.
இத்தகைய பற்பல அற்புதங்களையுடைய இத்திருத்தலத்தின் திருநாமத்தைக் கூறியவுடனே, அத்தலத்தின் பெருமைகளும், அத் தலத்தில் எழுந்தருளியுள்ள ஆண்டவனது அருட்குணங்களும் நினைவுக்கு வர, அதனால் மனங்குழைந்து உருக வேண்டும். நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகி வழிபடுவோர்க்கே பிறவி நோய் நீங்கி என்றும் அழியா இன்பம் எளிதில் கிடைக்கும்.
திருப்புகழ் கதைகள்: கொடியனைய இடை… முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.