தினசரி ஒரு வேத வாக்கியம்: 69. இயற்கையை இகழாதே!

ஆன்மிக கட்டுரைகள்

daily one veda vakyam 2 5

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

69. இயற்கையை இகழாதே!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்  

“தபந்தம் நனிந்த்யாத்” – யஜுர்வேதம் 
“சூரியனை நிந்திக்கக் கூடாது”

இயற்கையில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்துக்கும் ஒரு பயன் இருக்கும். அதனை ஆராய்ந்து பார்த்தால் இயற்கையைத் தாயாகவும் இறைவனின் சக்தியாகவும் அறிந்துகொள்வோம். அதனைப் பணிவோம்.

வெயில், மழை, காற்று அனைத்தும் நமக்கு உயிர் கொடுப்பவையே. அவற்றைக் கவனித்தால் ப்ரக்ருதி ஜடப்பொருள் அல்ல என்றும் அதில் தெய்வீகம் உள்ளது என்றும் தெளிவாகும். 

அந்த தெய்வீகத்தை தரிசித்த மகரிஷிகள் அவற்றின் மீது மனிதனின் எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரிவித்த வேத வாக்கியங்களில் இதுவும் ஒன்று.

வெய்யிலைத் தாங்க முடியாமல்மனிதன் பொறுமையின்றி நிந்திக்கிறான்.மழையையும் நிந்திக்கிறான். ஆனால் சூரிய ஒளி இரண்டு நாட்கள் தென்படாவிட்டால் வருத்தமடைகிறான். மழை தூறாவிட்டால் வேதனை அடைகிறான். அவை அதிகமானால் நிந்திக்கவும்  செய்கிறான். மனிதச் சிந்தனையில் உள்ள குறை இது. 

கடவுளின் கருணை இயற்கையில் மிகத் தெளிவாக விளங்குகிறது. கடும் வெயிலில் குளுமையை அளிக்கும் பழங்களையும் மலர்களையும் படைத்துள்ளான். மனிதனுக்கு தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் அறிவாற்றலையும் அளித்துள்ளான். அதனைப் பயன்படுத்தி தாற்காலிக வருத்தத்திலிருந்து காத்துக் கொள்ள முடிந்தால் சாஸ்வத பயன்களைப் பெற முடியும்.

இயற்கையை எந்தச் சூழலிலும் பழிப்பதோ இகழுவதோ கூடாது என்பது சனாதன தர்மத்தின் கட்டளை. மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள ஆத்மார்த்தமான தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கைக்கும் மனம் உண்டு. நம் மனதின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப எதிர்வினை ஆற்றுகிறது.

உத்தமரான, தார்மீகரின் சங்கல்பத்தால் தரிசு நிலத்தில் அமிர்த வருஷம் பொழியும். பெரும் வரட்சி கூட நீங்கி செழிப்பை அளிக்கும். இதற்குப் பல உதாரணங்களை நம் பண்டைய கலாச்சாரத்தில் காணமுடியும்.

ராகங்களால் காற்றையும் மழையையும் வெயிலையும் கூட மாற்ற முடியும். யக்ஞங்களால் இயற்கையில் மாற்றம் நிகழ்கின்றது. அதாவது மனிதனின் எண்ணங்களுக்கும் நடவடிக்கைக்கும் ஏற்ப இயற்கை பதில்வினை ஆற்றுகிறது.இவையெல்லாம் இயற்கைக்கு சைதன்யமும் ஹ்ருதயமும் உண்டு என்பதை நிரூபிக்கின்றன.

இயற்கையில் இயல்பாக நடக்கும் மாற்றங்களுக்கு உண்மையான பயன் உலக நன்மையே! சூரியன் அதிகமான நீரை உறிஞ்சும்படி வெப்பத்தை உதிர்க்காவிட்டால் பின்னாளில் மேகங்கள் ஏற்படாது.  மழைத் தூறல்மும்முரமாக விழாவிட்டால் சூரிய வெப்பத்தை எதிர்கொள்ளத் தகுந்த நீர்நிலைகள் குறைந்துபோகும். இவ்வாறு இயற்கை முழுவதும் ஒரு கட்டுப்பாடான ஒழுங்கில் நடைபோடுகிறது.

arkyam to surya bhagwan
arkyam to surya bhagwan

மற்றுமொரு விஷயம் – இயற்கை என்பது மனிதனுக்கு மட்டுமே படைக்கப்படவில்லை. இயற்கையில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அது பணி புரிகிறது. நம் தேவைகளுக்கு தகுந்தாற் போல இல்லை என்பதற்காக குறைகூறுவது தகாது.

நாம் இழிவாகப் பார்க்கும் சேறு நமக்கு அநாவசியமாக இருக்கலாம். ஆனால் அதிலேயே உழலும் உயிர்களுக்கு அதுவே ஆதாரம். இயற்கைக்கு சகல ஜீவ கோடிகளும் முக்கியமே.

ஆனால் தானே உயர்ந்தவன் என்ற பிரமையில் இருக்கும் மனிதன் அடைந்து வரும் முன்னேற்றம் எல்லாம் இயற்கையை அழிப்பதிலேயே குறியாக உள்ளது.

பஞ்சபூதங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்… இவற்றால் நாம் பெறக்கூடிய பயன்களையே பார்க்கிறோமே தவிர அவற்றோடு அன்பைப் பகிர்ந்து கொள்ள மறுக்கிறோம்

ஆனால் இயற்கையும் அமைதியாக விளங்க வேண்டும் என்று விரும்பும் சனாதன யக்ஞ கலாச்சாரத்தில் சைதன்யத்தோடு கூடிய ப்ரக்ருதியின் ஹ்ருதயத்தை பதில் வினையாற்றச் செய்யும் வழிபாட்டுப் பார்வை உள்ளது.

அம்மா எந்த நிலையிலும் குழந்தையின் நலனையே விரும்புவாள். அதேபோல் வெயில், மழை, காற்று இவற்றை ஜெகதீஸ்வரனின் அருளாக நாம் பார்க்கத் தொடங்கினால் நிச்சயம் எந்த குழப்பமும் இல்லாத சுற்றுச்சூழல்  உருவாகும்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 69. இயற்கையை இகழாதே! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply